கல்லல் அருகே மக்கள் தொடர்பு முகாம்: 160 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கல்

கல்லல் அருகே மக்கள் தொடர்பு முகாம்: 160 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கல்

பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கும் மாவட்ட ஆட்சியர் மதுசூதனன் ரெட்டி.

கல்லல் அருகே நடைபெற்ற மக்கள் தொடர்பு முகாமில் 160 பயனாளிகளுக்கு ரூ.46.67 இலட்சம் மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.

சிவகங்கை மாவட்டம், காரைக்குடி வட்டம், கல்லல் ஊராட்சி ஒன்றியம், பொய்யாலூர் ஊராட்சி, பாடத்தான்பட்டி கிராமத்தில், மாவட்ட நிர்வாகத்தின் மூலம் மக்கள் தொடர் முகாம் நிகழ்ச்சி மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ப.மதுசூதன் ரெட்டி, தலைமையில் நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித்தலைவர் பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களை பெற்று நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

பின்னர் பேசிய அவர், மக்கள் தொடர்பு முகாமின் நோக்கம் அரசின் திட்டங்கள் முழுமையாக கிராமப் பகுதிகளுக்கு சென்றடைய வேண்டும் என்பதேயாகும். அதனடிப்படையில், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஒவ்வொரு திங்கட்கிழமையும் பொதுமக்களிடம் மனுக்கள் பெறப்பட்டு உரிய நடவடிக்கையின் மூலம் தீர்வு காணப்படுகின்றன.

அதனைத்தொடர்ந்து, மாதம் ஒருமுறை மக்கள் தொடர்பு முகாம் நிகழ்ச்சி மாவட்ட ஆட்சித்தலைவர் தலைமையில் மாதம் ஒருமுறை ஒரு கிராமத்தில் மக்கள் தொடர்பு முகாம் நடத்தப்பட்டு பொதுமக்களுக்கு தேவையான நலத்திட்டங்கள் வழங்கப்படுகிறது.

கடந்த ஓராண்டிற்கு மேலாக கொரோனா நோய்த்தொற்று இருந்ததையொட்டி, ஊரடங்கு காலம் இருந்ததால் நடைபெறவில்லை. தற்போது ஊரடங்கு தளர்வுகளுக்கு பின் இம்மாதம் முதல் மக்கள் தொடர்பு முகாம் நிகழ்ச்சி நடைபெறுகிறது.

அந்தவகையில் காரைக்குடி வட்டம், கல்லல் ஊராட்சி, ஒன்றியம், பொய்யாலூர் ஊராட்சி, பாடத்தான்பட்டி கிராமத்தை தேர்வு செய்து நலத்திட்டங்கள் வழங்க வேண்டும் என்பதன் நோக்குடன் 15 நாட்களுக்கு முன்பு வருவாய்த்துறையின் மூலம் 225 மனுக்கள் பெறப்பட்டு, 160 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்படுகிறது. மீதமுள்ள மனுக்களுடன் இன்று பெறப்பட்ட 137 மக்கள் மீதும் சேர்த்து துறை ரீதியாக நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

மேலும், மக்கள் தொடர்பு முகாமின் நோக்கம், பொதுமக்களின் தேவைகளை உடனுக்குடன் நிறைவேற்றுவதுடன், ஊராட்சியின் வளர்ச்சிக்கு தேவையான திட்டங்களும் வழங்கப்பட்டு வருகிறது. அந்தவகையில் முதலமைச்சர் செயல்படுத்திய திட்டமான மக்களைத் தேடி மருத்துவத் திட்டத்தின் மூலம் மருத்துவ வசதிகள் தேவைப்படுபவர்களுக்கு வீடு தேடிச் சென்று மருத்துவச் சிகிச்சை வழங்கப்படுகிறது.

அதேபோல், கலைஞர் வேளாண்மை வளர்ச்சித் திட்டத்தின் மூலம் ஐந்து துறைகள் ஒருங்கிணைந்து, விவசாயிகளுக்கு தேவையான திட்டங்கள் வழங்கப்பட்டு வருவதுடன், விவசாயிகள் வேளாண்மைப் பணிகளை மேற்கொள்ள ஏதுவாக, பணிகள் துவங்கும் முன் கூட்டுறவுத்துறையின் மூலம் முன்பயிர்க்கடன் வழங்கப்படுகின்றது. இதேபோன்று பல்வேறு துறைகள் மூலமாகவும் எண்ணற்ற திட்டங்கள் வழங்கப்படுகின்றன.

முன்னதாக, வேளாண்மைத்துறை, பொது சுகாதாரத்துறை, தோட்டக்கலைத்துறை, ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்;ச்சித் திட்டத்துறை ஆகியத் துறைகள் மூலம் பொதுமக்கள் பார்த்து பயன்பெறும் வகையிலான கண்காட்சி அரங்குகள் அமைக்கப்பட்டு இருந்தததை, மாவட்ட ஆட்சித்தலைவர் பார்வையிட்டார்.

பின்னர், வருவாய்த்துறையின் மூலம் 55 பயனாளிகளுக்கு மாதாந்திர உதவித்தொகைக்கான ஆணையினையும், தொழிலாளர் நலத்துறையின் மூலம் 20 பயனாளிகளுக்கு பல்வேறு வகையான நலத்திட்ட உதவிகளையும், சமூகநலத்துறையின் மூலம் 2 பெண் குழந்தைகள் பாதுகாப்புத் திட்டத்தில் 3 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளையும், பொது சுகாதாரத்துறையின் மூலம் 5 பயனாளிகளுக்கு மக்களைத் தேடி மருத்துவத் திட்டத்தில் மருந்து, மாத்திரைகளும், 5 பயனாளிகளுக்கு ஊட்டச்சத்து பெட்டகங்களும், வேளாண்மைத்துறையின் மூலம் 6 பயனாளிகளுக்கு வேளாண் இடுபொருட்களும், தோட்டக்கலைத்துறையின் மூலம் 5 பயனாளிகளுக்கு மாண்புமிகு தமிழக முதலமைச்சரின் ஊட்டம் பெறும் காய்கறி தோட்டங்கள் அமைப்பதற்கு பல்வேறு வகையான மரக்கன்றுகளும், மகளிர் திட்டத்தின் மூலம் 41 பயனாளிகளுக்கு சுழல்நிதிக் கடனுக்கான ஆணைகளும், வட்டாரப் போக்குவரத்துத்துறையின் மூலம் 10 மகளிர்களுக்கு இருசக்கர வாகன ஓட்டுநர் உரிம ஆணையினையும், ஊரக வளர்ச்சித்துறையின் மூலம் 10 பயனாளிகளுக்கு பிரதமர் பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் நலவாரிய அட்டையும், மாவட்ட வழங்கல் துறையின் மூலம் 10 பயனாளிகளுக்கு புதிய குடும்ப அட்டைகளும் என ஆக மொத்தம் 160 பயனாளிகளுக்கு ரூ.46.67 இலட்சம் மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் சிவராமன், தேவகோட்டை வருவாய் கோட்டாட்சியர் பிரபாகரன், துணை இயக்குநர் (சுகாதாரப்பணிகள்) மரு.ராம்கணேஷ், கல்லல் ஊராட்சி ஒன்றியக் குழுத்தலைவர் சொர்ணம் அசோகன், தனித்துணை ஆட்சியர்கள் காமாட்சி, ரெத்தினவேல், காரைக்குடி வட்டாட்சியர் மாணிக்கவாசகம், பொய்யாலூர் ஊராட்சி மன்றத் தலைவர் திவ்யநாதன், வட்டாரப் போக்குவரத்து அலுவலர் மரு.ஆல்வின் ஜேம்ஸ், மருத்துவக் கண்காணிப்பு அலுவலர் முருகேசன், சுகாதார ஆய்வாளர் கண்ணன் மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்கொண்டனர்.

Tags

Next Story