சிவகங்கை: பருவமழை குறைவினால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் ஆட்சியர் ஆய்வு

சிவகங்கை: பருவமழை குறைவினால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் ஆட்சியர் ஆய்வு
X

சிவகங்கை மாவட்ட ஆட்சியர் மதுசூதன் ரெட்டி பருவமழை பொய்ப்பினால் பாதிக்கப்பட்ட விவசாய நிலங்களை ஆய்வு செய்தார்.

சிவகங்கை மாவட்டத்தில் பருவமழை குறைவினால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் ஆட்சியர் மதுசூதன் ரெட்டி ஆய்வு செய்தார்.

சிவகங்கை மாவட்டம்,இளையான்குடி வட்டம், காரைக்குளம் மற்றும் நெஞ்சத்தூர் பகுதிகளில்பருவமழை குறைவினால், பாதிக்கப்பட்டுள்ள விவசாய நிலங்களைமாவட்ட ஆட்சித்தலைவர் ப.மதுசூதன் ரெட்டி,நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

பின்னர் மாவட்ட ஆட்சியர் மதுசூதன் ரெட்டி கூறியதாவது:-

சிவகங்கை மாவட்டத்தில், தற்போது பெறப்பட்டுள்ள பருவமழையினால் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நீர்வளங்கள் மேம்பாடு அடைந்து, விவசாயப் பயன்பாட்டிற்கு பயனுள்ள வகையில் அமைந்துள்ளது. இருப்பினும், இளையான்குடி உள்ளிட்ட சில வட்டாரங்களுக்குட்பட்ட பகுதிகளில் மழை குறைவாக பெறப்பட்டுள்ளதால், அப்பகுதிகளில் விவசாய நிலங்களில் சில பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன. அவைகள் தொடர்பாக உரிய ஆய்வுகள் மேற்கொண்டு, அரசின் சார்பில் சில நிவாரணங்களை விவசாயிகளுக்கு வழங்குவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளும் பொருட்டு, இளையான்குடி வட்டத்திற்குட்பட்ட காரைக்குளம் மற்றும் நெஞ்சத்தூர் ஆகியப்பகுதிகளிலுள்ள விவசாய நிலங்களில் கள ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டது. மேலும், இப்பகுதிகளில் இவை தொடர்பாக கணக்கெடுக்கும் பணிகளும் நடைபெற்று வருகிறது. இதற்கான அறிக்கையினை துறை ரீதியாக சமர்ப்பிப்பித்து, அரசால் வழங்கப்படும் உரிய நிவாரணங்களை வழங்கிட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.

மேலும், விவசாயிகள் தங்களது விவசாய நிலங்களின் பாதிப்புகள் குறித்த விபரங்களை துறை சார்ந்த அலுவலர்களை தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம். குறிப்பாக, தங்களது விளைநிலங்களில் நெற்பயிர்கள் மட்டும் பயிரிவது மட்டுமன்றி, மண்ணின் தன்மைக்கேற்றார் போல் பல்வேறு பயிர்கள் மற்றும் தானியங்களை பயிரிட்டும், அதன்மூலமும் உற்பத்தியைப் பெருக்கி, இலாபம் ஈட்டுவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

இவ்வாறு மாவட்ட ஆட்சித்தலைவர் ப.மதுசூதன் ரெட்டி, தெரிவித்தார்.

இந்த ஆய்வின் போது, இணை இயக்குநர் (வேளாண்மை) தனபாலன், இளையான்குடி வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் தங்கபாண்டியன், வேளாண்மை அலுவலர் அழகர்ராஜா, வட்டாட்சியர் அசோக், துணை வேளாண்மை அலுவலர் சப்பாணிமுத்து, உதவி வேளாண்மை அலுவலர் யுவராணி, கிராம நிர்வாக அலுவலர்கள் கார்த்திக், பிரபாகரன் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள், விவசாயிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story