/* */

சிவகங்கையில் வளர்ச்சி பணிகள் பொதுமக்களின் பயன்பாட்டிற்கு துவக்கம்

சிவகங்கை மாவட்டத்தில் வளர்ச்சி திட்டப்பணிகள் பொதுமக்களின் பயன்பாட்டிற்கு துவக்கி வைக்கப்பட்டது.

HIGHLIGHTS

சிவகங்கையில் வளர்ச்சி பணிகள் பொதுமக்களின் பயன்பாட்டிற்கு துவக்கம்
X

சிவகங்கை மாவட்டத்தில் நிறைவுற்ற வளர்ச்சி திட்ட பணிகளை அமைச்சர் பெரிய கருப்பன் திறந்து வைத்தார்.

கூட்டுறவுத்துறை அமைச்சர் கேஆர்.பெரியகருப்பன் ,கல்லல் ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்ட பகுதிகளில் ரூ.31.98 இலட்சம் மதிப்பீட்டில் முடிவுற்ற 3 வளர்ச்சித் திட்ட பணிகளை பொதுமக்களின் பயன்பாட்டிற்குதொடங்கி வைத்தார்.

கூட்டுறவுத்துறை அமைச்சர் கேஆர்.பெரியகருப்பன் , கல்லல் ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்ட பகுதிகளில் முடிவுற்ற வளர்ச்சித் திட்ட பணிகளை, பொதுமக்களின் பயன்பாட்டிற்கு தொடங்கி வைத்தார்.

அப்போது அமைச்சர் பெரிய கருப்பன் பேசியதாவது:-

தமிழ்நாடு முதலமைச்சர், பொதுமக்களுக்கு பயனுள்ள வகையில் பல்வேறு மக்கள் நலத்திட்டங்களை தொலைநோக்குப் பார்வையுடன் செயல்படுத்தி வருவது மட்டுமின்றி, பொதுமக்களின் அடிப்படைத் தேவைகளை நிவர்த்தி செய்திடும் பொருட்டு, அனைத்துப் பகுதிகளிலும் பல்வேறு வளர்ச்சிப் பணிகளை மேற்கொள்வதற்கென துறை ரீதியான உத்தரவுகளை பிறப்பித்து, அதற்கான நடவடிக்கைகளை சிறப்பாக மேற்கொண்டு வருகிறார்.

அதன்படி, சிவகங்கை மாவட்டத்தில் தமிழக அரசால் செயல்படுத்தப்பட்டு வரும் பல்வேறு மக்கள் நலத்திட்டங்களை மாவட்டத்தின் கடைகோடி பகுதியில் வசிக்கும் மக்களுக்கு வழங்கி வருவது மட்டுமின்றி, அனைத்து நகர்ப்புற மற்றும் கிராமப்புற பகுதிகளிலும் அடிப்படை வசதிகளை மேம்பாடு அடையச் செய்வதற்கான பணிகள் துரிதமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அப்பணிகளை பல்வேறு திட்டங்கள் மற்றும் பல்வேறு நிதிகளின் கீழ் மேற்கொள்ளப்பட்டு, அதற்கான பணிகளும் நடைபெற்று வருகிறது.

அதில் சட்டமன்ற உறுப்பினர்களுக்கு தங்களது தொகுதியில் பல்வேறு வளர்ச்சிப் பணிகளை மேற்கொள்வதற்கென, ஆண்டிற்கு சுமார் ரூ.3.00 கோடி மதிப்பீட்டில் நிதி ஒதுக்கீடு செய்யப்படுகிறது.

அதன்படி, திருப்பத்தூர் சட்டமன்றத் தொகுதியில் 121 ஊராட்சிகளும், 6 பேரூராட்சிகளும் மற்றும் 750 கிராமங்களும் உள்ளடக்கியதாக உள்ளன. பொதுமக்களின் கோரிக்கையின் அடிப்படையில் சம்பந்தப்பட்ட பகுதிகளில் சட்டமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியின் கீழ் பல்வேறு திட்ட பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

அந்த வகையில், திருப்பத்தூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கல்லல் ஊராட்சி ஒன்றியப் பகுதிகளான சிராவயல் ஊராட்சி, கிளாமடம் கிராமத்தில், சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு திட்ட நிதியின் கீழ் ரூ.7.50 இலட்சம் மதிப்பீட்டில் புதிதாக கட்டி முடிக்கப்பட்ட கலையரங்கத்தினை பொதுமக்களின் பயன்பாட்டிற்கென இன்றையதினம் திறந்து வைக்கப்பட்டுள்ளது.

மேலும், இப்பகுதி மக்களின் தற்போதைய கோரிக்கைக்கிணங்க, புதிதாக சமுதாயக்கூடத்தினை நமக்கு நாமே திட்டத்தின் கீழ் கட்டுவதற்கும் மற்றும் அதிகரம் பள்ளியினை நிலை உயர்த்துவதை தமிழக அரசின் மேலான கவனத்திற்கு எடுத்துச் சென்று நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

இது தவிர, தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் சார்பில் கம்பனூர் ஊராட்சி, கூத்தக்குடி கிராமத்தில் சுமார் 90 குடும்பங்கள் வசித்து வரும் இக்கிராம பொதுமக்களின் நீண்ட நாள் கோரிக்கை நிறைவேற்றிடும் பொருட்டும், தடையின்றி சீரான மின் வினியோகம் வழங்கிடும் பொருட்டும், புதிதாக ரூ.9.89 இலட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள 100 மின்மாற்றியினையும் பொதுமக்களின் பயன்பாட்டிற்கு தொடங்கி வைக்கப்பட்டுள்ளது.

மேலும், பலவான்குடி ஊராட்சி, ஆலத்துப்பட்டி கிராமத்தில் ரூ.14.59 இலட்சம் மதிப்பீட்டில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் சார்பில் புதிதாக கட்டப்பட்டுள்ள உணவு தானிய கிடங்கும் பயன்பாட்டிற்கு திறந்து வைக்கப்பட்டுள்ளது.

இதுபோன்று, கல்லல் ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்ட பகுதிகளில் ரூ.31.98 இலட்சம் மதிப்பீட்டில் முடிவுற்ற 3 வளர்ச்சித் திட்டப்பணிகள் பொதுமக்களின் பயன்பாட்டிற்கு இன்றையதினம் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது.

பொதுமக்களின் அடிப்படைத் தேவைகளை நிவர்த்தி செய்வது ஒவ்வொரு மக்கள் பிரதிநிதிகளின் கடமையாகும். ஆகவே, தங்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகளிடம் தங்களது கிராமங்களின் அடிப்படை கூடுதல் தேவைகள் குறித்து, எடுத்துரைத்து, அதனை நிவர்த்தி செய்வதற்கான நடவடிக்கைகளை பொதுமக்கள் மேற்கொள்ள வேண்டும். அதில் தகுதியான கோரிக்கைகள் மீது உடன் நடவடிக்கைகள் மேற்கொண்டு, அதற்கான பணிகள் உடனடியாக மேற்கொள்ளப்படும்.

இவ்வாறு கூட்டுறவுத்துறை அமைச்சர் கேஆர்.பெரியகருப்பன் பேசினார்.

இந்நிகழ்ச்சிகளில், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குநர் சிவராமன், கல்லல் ஊராட்சி ஒன்றியக் குழுத்தலைவர் சொர்ணம் அசோகன், தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழக செயற் பொறியாளர் லதாதேவி, கண்டரமாணிக்கம் உதவி பொறியாளர் சந்திரசேகர், மாவட்ட ஊராட்சி துணைத்தலைவர் சரஸ்வதி, கல்லல் ஊராட்சி ஒன்றியக் குழு துணைத்தலைவர் நாராயணன், மாவட்ட ஊராட்சி உறுப்பினர் மஞ்சரி லெட்சுமணன், ஒன்றியக்குழு உறுப்பினர்கள் ம.முத்தழகு, ச.சையது அபுதாகிர், ஊராட்சி மன்றத்தலைவர் சரோஜாதேவி (சிராவயல்), அமுதா (கம்பனூர்), சத்தியக்கலா (பலவான்குடி), வட்டார வளர்ச்சி அலுவலர்கள் செழியன், அழகு மீனாள் உட்பட துறை சார்ந்த அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Updated On: 20 March 2023 1:51 PM GMT

Related News