சிவகங்கை மாவட்ட வட்டாட்சியர் அலுவலகங்களில் ஆட்சியர் மதுசூதன் ரெட்டி ஆய்வு

வட்டாட்சியர் அலுவலகங்களில் சிவகங்கை மாவட்ட ஆட்சியர் மதுசூதன் ரெட்டி ஆய்வு நடத்தினார்.
சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரி மற்றும் திருப்பத்தூர் வட்டாட்சியர் அலுவலகங்களின் செயல்பாடுகள் மற்றும் பல்வேறு நிலைகளில் பராமரிக்கப்பட்டு வரும் பதிவேடுகள் குறித்து, மாவட்ட ஆட்சித்தலைவர் ப.மதுசூதன் ரெட்டி, நேரில் பார்வையிட்டு ஆண்டாய்வு மேற்கொண்டார்.
பின்னர் மாவட்ட ஆட்சியர் செய்தியாளர்களிடம் தெரிவிக்கையில்
தமிழ்நாடு முதலமைச்சர், பொதுமக்களின் கோரிக்கைகளை நிவர்த்தி செய்வதற்கு முன்னுரிமை அளித்து, அவர்களின் தேவைகளை உடனுக்குடன் நிவர்த்தி செய்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்.
மேலும், பொதுமக்களுக்கு பயனுள்ள வகையில் அரசின் சார்பில் பல்வேறு நலத்திட்டங்கள் சிறப்பாக செயல்படுத்தப்பட்டு, அனைத்துப்பகுதிகளிலும், வளர்ச்சிப் பணிகளும் துரிதமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது.அவ்வாறு மாவட்டங்களில், செயல்படுத்தப்பட்டு வரும் நலத்திட்டங்கள் குறித்தும், பகுதிவாரியாக மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சித் திட்டப்பணிகள் குறித்தும், தமிழ்நாடு முதலமைச்சர் , சில மாவட்டங்களை ஒருங்கிணைத்து மண்டல ரீதியாக ஆய்வுக் கூட்டமும் சம்பந்தப்பட்ட துறைகள் ரீதியாக துறை சார்ந்த அலுவலர்களுடன் மேற்கொண்டு வருகிறார்கள்.
அதன்படி, அரசின் திட்ட செயல்பாடுகள் மற்றும் மாவட்டம் முழுவதும் சம்பந்தப்பட்ட பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சிப் பணிகள் குறித்தும், அதன் நிலைகள் குறித்தும் அரசிற்கு அறிக்கைகள் சமர்ப்பிப்பதற்கு ஏதுவாக, அனைத்து கோட்டாட்சியர் அலுவலர்கள், வட்டாட்சியர் அலுவலர்கள் மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ஆகியவைகளில் உரிய ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
அதனடிப்படையில், இன்றையதினம் சிங்கம்புணரி வட்டாட்சியர் அலுவலகத்திலும் மற்றும் திருப்பத்தூர் வட்டாட்சியர் அலுவலகத்திலும் ஆண்டாய்வு மேற்கொள்ளப்பட்டது. இந்த ஆய்வுகளின் போது ,சேவை மையம், நில அளவைப்பிரிவு, வட்ட வழங்கல் பிரிவு, சமூகப் பாதுகாப்புத் திட்ட பிரிவு, வட்டாட்சியர் அலுவலகங்களில் பணிபுரியும் ஒவ்வொரு பிரிவைச் சார்ந்த அலுவலர்கள் பராமரிக்கப்பட்டு வரும் பதிவேடுகள்,நிலுவையிலுள்ள பதிவேடுகளின் நிலை மற்றும் பொதுமக்களிடமிருந்து பெறப்பட்ட பல்வேறு கோரிக்கை மனுக்களின் மீது எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகளும், அது தொடர்பாக பராமரிக்கப்பட்டு வரும் பதிவேடுகள், அலுவலகப் பணியாளர்களின் வருகைப் பதிவேடு, தன்பதிவேடு, பூர்த்தி செய்யப்பட்ட பணியிடங்கள் மற்றும் தமிழக அரசால் செயல்படுத்தப்பட்டு வரும் வளர்ச்சித் திட்டப்பணிகளில் முடிவுற்றுள்ள பணிகள், நடைபெற்று வரும் பணிகள் மற்றும் அரசின் பல்வேறு நலத்திட்டங்களின் கீழ் துறைவாரியாக பொதுமக்களுக்கு வழங்கப்பட்டுள்ள நலத்திட்ட உதவிகளின் விபரங்கள், பயன்பெற்ற பயனாளிகளின் எண்ணிக்கை ஆகியவைகள் தொடர்பான பராமரிக்கப்பட்டு வரும் கோப்புகள் போன்றவைகள் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
மேலும், மனு அளிக்க வரும் பொதுமக்களுக்கு தேவையான வழிமுறைகளைக் கூறி விண்ணப்பிக்க செய்து, அரசின் பயன்களை பெறுவதற்கு உதவிடவும், தனித்துறையின் மூலம் செய்யக்கூடியப் பணிகளை விரைந்து முடித்திடவும், பிறதுறைகளுடன் இணைந்து மேற்கொள்ளும் பணிகளை கலந்து பேசி காலதாமதமின்றி குறிப்பிட்ட காலத்திற்குள் முடித்திடவும் அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது என, மாவட்ட ஆட்சித்தலைவர் ப.மதுசூதன் ரெட்டி, தெரிவித்தார்.
இந்த ஆய்வுகளின் போது, உதவி ஆணையர் (கலால்) சி. ரத்தினவேல், மாவட்ட வழங்கல் அலுவலர் க.நஜிமுன்னிசா, வட்டாட்சியர்கள் சாந்தி (சிங்கம்புணரி), வெங்கடேசன் (திருப்பத்தூர்) மற்றும் தனி வட்டாட்சியர்கள் (சமூகப் பாதுகாப்புத் திட்டம்) சுந்தராஜன் (சிங்கம்புணரி), கண்ணதாசன் (திருப்பத்தூர்) உட்பட அரசு அலுவலர்கள் பலர் உடனிருந்தனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu