ஊரடங்கு தளர்வு : ஏற்காட்டிற்கு பயணிகள் வருகை கணிசமாக அதிகரிப்பு
ஊரடங்கு தளர்வு வழங்கப்பட்டதையடுத்து சுற்றுலாத்தலமான ஏற்காட்டிற்கு பயணிகள் வருகை கணிசமாக அதிகரித்துள்ளது.
HIGHLIGHTS
கொரோனா தடுப்பு நடவடிக்கையாக அமல்படுத்தப்பட்ட ஊரடங்கு காரணமாக சுற்றுலா தளங்களும் வெறிச்சோடி காணப்பட்டன. முதல் அலை தடுப்பு நடவடிக்கையில் தளர்வு அளிக்கப்பட்ட போதிலும் ஏற்காடு செல்ல சுற்றுலா பயணிகள் இபாஸ் கட்டாயம் பெற்றிருக்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டிருந்தது. இதன் காரணமாக கடந்த பல மாதங்களாகவே சுற்றுலா பயணிகள் வருகை இன்றி ஏற்காட்டில் வியாபாரிகள் வாழ்வாதாரத்தை இழந்து தவித்து வந்தனர்.
இந்தநிலையில் கடந்த வாரம் சுற்றுலா தலங்களுக்கு செல்ல அனுமதி அளிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து விடுமுறை தினமான இன்று ஏற்காட்டில் சுற்றுலா பயணிகள் வருகை கணிசமாக அதிகரித்துள்ளது. சேலம் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் சுற்றுலா பயணிகள் குடும்பம் குடும்பமாக ஏற்காட்டுக்கு சென்ற காரணத்தினால் மீண்டும் இயல்பு நிலை திரும்பியுள்ளது. வியாபாரம் சூடுபிடித்துள்ளதால் சாலையோர வியாபாரிகள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.