வெள்ளைக்கல் சுரங்கம்: மீண்டும் திறக்க வேண்டி போராட்டம்

வெள்ளைக்கல் சுரங்கம்: மீண்டும் திறக்க வேண்டி போராட்டம்
X
வெள்ளைக்கல் சுரங்கத்தை விரைந்து திறக்காவிட்டால் தேர்தலை புறக்கணிப்பதாக SRCL தொழிலாளர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

சேலம் அருகே சுமார் 1360 ஏக்கர் பரப்பளவு உள்ள சுரங்கத்தில் வெட்டி எடுக்கப் படும் மேக்னசைட் எனும் வெள்ளைக்கல் கனிமத்தை கொண்டு SRCL நிறுவனம் செயல்பட்டு வந்தது. இந்த சுரங்கத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பணியாளர்கள் பணியாற்றி வந்தனர். இந்த நிலையில் சுற்றுச்சூழல் பாதிப்பு காரணமாக கடந்த 2017 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் இச்சுரங்கம் மூடப்பட்டது. கடந்த 4 ஆண்டுகளுக்கு மேலாகியும் சுரங்கம் திறக்கப்படாததால் இதில் பணியாற்றிவந்த ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலையின்றி வருமானம் இழந்து தவித்து வருகின்றனர்.

இந்த நிலையில் வெள்ளைக்கல் சுரங்கத்தை மீண்டும் திறக்க வலியுறுத்தி தொழிலாளர்கள் கடந்த குடியரசு தினம் முதல் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மூன்றாவது நாளாக இன்று நடைபெற்ற காத்திருப்பு போராட்டத்தில் 50க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பங்கேற்று கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன கோஷங்களை எழுப்பினர். சுரங்கத்தை மீண்டும் திறப்பதாக அரசு உத்தரவாதம் அளிக்கும் வரை தங்களது போராட்டம் தொடரும் என தெரிவித்துள்ள தொழிலாளர்கள், சுரங்கத்தை திறக்க அரசு நடவடிக்கை எடுக்காவிட்டால் வரும் சட்டமன்றத் தேர்தலை புறக்கணிக்க உள்ளதாக எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

Tags

Next Story