சேலம் மாநகராட்சி நிர்வாகத்தை கண்டித்து மக்கள் மெழுகுவர்த்தி ஏந்தி போராட்டம்

அடிப்படை வசதி கேட்டு போராட்டத்தில் ஈடுபட்ட கிச்சிபாளையம் மக்கள்.
சேலம் மாநகராட்சி அம்மாபேட்டை மண்டலத்திற்கு உட்பட்ட கிச்சிப்பாளையம் பகுதியில் சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. இந்தப் பகுதியில் தெருவிளக்கு, சாக்கடை வசதி, சாலை வசதி மற்றும் கண்காணிப்பு கேமரா உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்து தரக்கோரி அப்பகுதி மக்கள் சேலம் மாநகராட்சி நிர்வாகத்திற்கு பலமுறை கோரிக்கை மனு அளித்துள்ளனர். இது தொடர்பாக அப்பகுதி மக்கள் பல்வேறு போராட்டங்களிலும் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில் இன்றைய தினம் அப்பகுதி மக்கள் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்துடன் இணைந்து பல ஆண்டுகளாக அடிப்படை வசதிகளை செய்து தராத மாநகராட்சி நிர்வாகத்தை கண்டித்து சேலம் மாநகராட்சி அலுவலகம் முன்பு கையில் மெழுகுவர்த்தி ஏந்தி நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தங்கள் பகுதியில் தெருவிளக்கு மற்றும் கண்காணிப்பு கேமராக்கள் இல்லாததை பயன்படுத்தி கொலை, கொள்ளை என பல்வேறு குற்றச்செயல்கள் நடைபெற்று வருவதாகவும், இந்த குற்றங்களை குறைக்கும் வகையில் மாநகராட்சி நிர்வாகம் விரைந்து தங்கள் பகுதியில் தெருவிளக்கு மற்றும் கண்காணிப்பு கேமரா வசதியை செய்து தர வலியுறுத்தி கையில் மெழுகுவர்த்தி ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் அம்மாபேட்டை கிளைச் செயலாளர் தமிழரசன் தலைமையில் திரளானோர் பங்கேற்று மாநகராட்சி நிர்வாகத்தை கண்டித்து கோஷங்களை எழுப்பினர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu