சேலத்தில் குடும்ப அட்டை பெற தாலுகா அலுவலகத்தில் குவிந்த பொதுமக்கள்
சேலத்தில் குடும்ப அட்டை பெறுவதற்காக தாலுகா அலுவலகத்தில் மக்கள் நீண்ட வரிசையில் நின்று பெற்றுச் சென்றனர்.
HIGHLIGHTS
தமிழகத்தில் குடும்ப அட்டை விண்ணப்பிக்கும் நபர்களுக்கு 15 நாட்களுக்குள் கிடைக்கும் என்று தமிழக அரசு அறிவித்து நடைமுறைப்படுத்தியுள்ளது. அதன்படி, சேலம் மாவட்டத்தில் இதனால் குடும்ப அட்டைகளுக்கு பொதுமக்கள் ஆர்வத்துடன் விண்ணப்பித்து வருகின்றனர். ஏற்கனவே விண்ணப்பித்தவர்களுக்கும் அந்தந்த தாலுகா அலுவலகங்களில் குடும்ப அட்டை வழங்கும் பணி நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், சேலம் மணியனூர் பகுதியில் உள்ள தெற்கு வட்டாட்சியர் அலுவலகத்தில் இன்று முதற்கட்டமாக விண்ணப்பித்த 1500 குடும்பங்களுக்கு குடும்ப அட்டை வழங்கும் பணி துவங்கியுள்ளது. காலை முதலே குடும்ப அட்டை பெறுவதற்கு பொதுமக்கள் குவிந்தனர். குடும்ப அட்டை பெறுவதற்கு வந்த பொதுமக்களுக்கு டோக்கன் வழங்கப்பட்டு, முதல் 500 பேருக்கு இன்று வழங்கும் பணி துவங்கியுள்ளது. அடுத்த மூன்று நாட்களுக்குள் குடும்ப அட்டைகள் வழங்கபடவுள்ளது.
பொதுமக்கள் காலை முதலே நீண்ட வரிசையில் காத்திருந்து குடும்ப அட்டையை பெற்று சென்றனர். கொரோனா தொற்று பரவாமல் இருப்பதற்காக சமூக இடைவெளியை கடைபிடித்து நிற்க வைத்து நீண்ட வரிசையில் நின்று குடும்ப அட்டையை பெற்றுச் சென்றனர். குடும்ப அட்டை வழங்குவதற்கு முன்பாக ஆதார் எண் சரிபார்க்கப்பட்டு குடும்ப உறுப்பினர்கள் கையொப்பம் பெற்ற பிறகு வழங்கப்பட்டது.