தமிழகம் 50 ஆண்டுகள் பின்னோக்கியுள்ளது : மு.க.ஸ்டாலின்

அதிமுகவின் 10 ஆண்டுகால ஆட்சியில், தமிழகம் 50 ஆண்டுகள் பின்னோக்கி சென்றுள்ளது என்று சேலத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.

சட்டமன்ற தேர்தலையொட்டி திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் சேலம் கோட்டை மைதானத்தில் தேர்தல் பரப்புரை மேற்கொண்டார்.

ஓமலூர் சட்டமன்ற தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் மோகன்குமாரமங்கலம், சேலம் வடக்கு சட்டமன்ற தொகுதி திமுக வேட்பாளர் வழக்கறிஞர் ராஜேந்திரன், தெற்கு சட்டமன்ற தொகுதி திமுக வேட்பாளர் சரவணன் மற்றும் மேற்கு சட்டமன்ற தொகுதி திமுக வேட்பாளர் ராஜேந்திரன் ஆகியோரை ஆதரித்து வாக்கு சேகரித்தார். அப்போது அவர் பேசியதாவது :

தேர்தலுக்காக வந்து போகிறவன் அல்ல ஸ்டாலின்; உங்களுடன் எப்போதும் இருப்பவன் நான். திமுக ஆட்சியில் இருந்த போது எந்த மாவட்டத்திற்கும் செய்யாத திட்டங்களை சேலத்திற்கு செய்துள்ளோம் அதற்கு முழு காரணம் வீரபாண்டி ஆறுமுகம்

உருக்காலை, ரயில்வேகோட்டம், அரசுக்கலை கல்லூரிகள், பல்கலைக்கழகம், சூப்பர் ஸ்பெசாலிட்டி மருத்துவமனை, சேலம் -ஆத்தூர் குடிநீர் திட்டம், ஏத்தாப்பூர் மரவள்ளி ஆராய்ச்சி நிலையம் என கணக்கற்ற திட்டங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளது. சேலம் மாவட்டத்திற்கு திமுக ஆட்சியில் நிறைவேற்றப்பட்ட திட்டங்களை பட்டியலிட்டது போல உங்களால் பட்டியலிட முடியுமா.

முதல்வராக பொறுப்பேற்க சசிகலா காலில் தவழ்ந்து போனாரா இல்லையா என பழனிசாமி சொல்லட்டும் திமுக ஆட்சி காலத்தில் சேலம் மாவட்டத்திற்கு கொண்டு வரப்பட்ட திட்டங்கள் அனைத்தும் முடக்கி வைக்கப்பட்டு உள்ளதாக குற்றம்சாட்டிய ஸ்டாலின் சேலத்தில் ஏர் போர்ட் தொடங்கவேன் என்று கூறினார் செய்தாறா? சேலத்தை சுற்றி ரிங் ரோடு அமைப்பேன் என்றார் அமைக்கப்பட்டதா? இல்லை இல்லை என்று கூறும் அளவிற்கு திட்டங்களை காற்றில் பறக்கவிட்டவர் பழனிசாமி.

பத்தாண்டு அதிமுக ஆட்சி காலத்தில் தமிழகம் 50 ஆண்டுகள் பின்னோக்கி சென்றுள்ளது. பெரியார், அண்ணா, கலைஞர் வாழ்ந்த திராவிட மண்ணில் மோடி மஸ்தான் வேலை பலிக்காது. இது ஆட்சி மாற்றத்துக்கான தேர்தல் மட்டுமல்ல சுய மரியாதையை மீட்பதற்கான தேர்தல் இவ்வாறு அவர் பேசினார்.


Tags

Next Story
ai in future agriculture