குழந்தையை காப்பாற்ற ரூ.16 கோடி மருந்து கேட்டு முதல்வருக்கு பெற்றோர் கோரிக்கை

தசை நார் நோயால் பாதிக்கப்பட்டுள்ள ஸ்ரீஷாவுடன் பெற்றோர் பூபதி-ஜெயந்தி.
சேலம் மாநகர் அரிசிபாளையம் பகுதியைச் சேர்ந்த பூபதி-ஜெயந்தி தம்பதியினருக்கு 9 மாதமே ஆன ஸ்ரீஷா என்கிற பெண் குழந்தை உள்ளது. பூபதி ஹைதராபாத்தில் உள்ள தனியார் நிறுவனம் ஒன்றில் பணியாற்றி வருகிறார்.
இந்த நிலையில் நான்கு முதல் ஐந்து மாதத்தில் குழந்தைகளுக்கு இருக்கும் வளர்ச்சி ஏதும் ஸ்ரீஷாவிற்கு இல்லாததால், அவருடைய பெற்றோர் ஹைதராபாத்தில் உள்ள தனியார் மருத்துவமனையை நாடியுள்ளனர். அங்கு குழந்தையை பரிசோதித்த மருத்துவர்களின் அறிவுரைப்படி பெங்களூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் குழந்தையை சிகிச்சைக்காக சேர்த்துள்ளனர். அங்கு குழந்தையை பரிசோதித்த மருத்துவர்கள் குழந்தைக்கு முதுகெலும்பு தசை நார் சிதைவு நோய் ( SMA TYPE 1) இருப்பது தெரியவந்துள்ளது.
இதையடுத்து குழந்தையை காப்பாற்ற 16 கோடி ரூபாய் மதிப்பிலான மருந்தை உடனடியாக குழந்தைக்கு கொடுக்க வேண்டும் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இதனால் அதிர்ச்சியடைந்த பெற்றோர், நடுத்தர குடும்பத்தை சேர்ந்த தங்களால் இவ்வளவு பெரிய தொகையை உடனடியாக ஏற்பாடு செய்ய முடியாத நிலையில் உள்ளதால் தமிழக அரசு தங்களது குழந்தையை காப்பாற்ற உதவி செய்யுமாறு சேலம் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளனர்.
ஒன்பது மாதமே ஆன தங்களது குழந்தையை காப்பாற்ற 16 கோடி ரூபாய் மதிப்பிலான மருந்து உடனடியாக கிடைக்க தமிழக முதல்வர் கருணை உள்ளத்தோடு ஆவணம் செய்யுமாறு குழந்தையின் தாய் ஜெயந்தி கண்ணீர் மல்க கோரிக்கை விடுத்துள்ளார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu