பாதிரியாரை தேசத்துரோக வழக்கில் கைது செய்யக்கோரி பாஜகவினர் ஆர்ப்பாட்டம்
பாதிரியார் ஜார்ஜை, தேசத்துரோக சட்டத்தில் கைது செய்யக்கோரி, சேலத்தில் பாஜகவினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
HIGHLIGHTS
கன்னியாகுமரி மாவட்டத்தில் கடந்த 22ஆம் தேதி கிறிஸ்தவ நிகழ்ச்சி ஒன்றில், போதகர் ஜார்ஜ் பொன்னையா மதக்கலவரத்தை தூண்டும் வகையிலும், பிரதமர் மோடி மற்றும் உள்துறை அமைச்சர் ஆகியோரை இழிவுபடுத்தி பேசியதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது. இது, பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், அவர் மீது ஏழு பிரிவுகளில் தமிழக அரசு வழக்கு பதிவு செய்து, தனிப்படை அமைத்து போலீசார் தேடி வந்தனர். இன்று காலை மதுரை அருகே அவர் கைது செய்யப்பட்டார்.
இந்நிலையில், பாதிரியார் ஜார்ஜ் பொன்னையாவை, தேசத்துரோக வழக்கில் கைது செய்ய வலியுறுத்தி, தமிழகம் முழுதும் பாஜக சார்பில், இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது. சேலத்தில், மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே, பாரதிய ஜனதா கட்சியின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்ட தலைவர் சுரேஷ்குமார் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட பாரதிய ஜனதா கட்சியினர் கலந்து கொண்டு, பாதிரியாரை கண்டித்து கண்டன கோஷங்களை எழுப்பினர். அவர் மீது தேசத்துரோக வழக்கு பதிய வேண்டுமென்று கோரிக்கை விடுத்தனர்.