குடிநீர்த் தொட்டியில் மனிதக்கழிவை கொட்டிவர்கள் மீது கடும் நடவடிக்கை: அமைச்சர் தகவல்

புதுக்கோட்டை அருகே இறையூர் கிராமத்தில் உள்ள கோயிலில் நடந்த பூஜையில் பங்கேற்ற அமைச்சர் சிவ.வீ. மெய்யநாதன்
பட்டியலின மக்கள் பயன்படுத்தக்கூடிய மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் மனிதக்கழிவை கலந்த கொடூரமான செயலை செய்தவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார் சுற்றுச்சூழல்துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன்.
புதுக்கோட்டை மாவட்டம், அன்னவாசல் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட முத்துக்காடு ஊராட்சி இறையூர் கிராமத்தில் மக்கள் பயன்படுத்தக்கூடிய மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் கடந்த சில தினங்களுக்கு முன்பு மர்ம நபர்கள் மனிதக்கழிவை கலந்தது பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இதனை அடுத்து கந்தர்வகோட்டை தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் எம்.சின்னதுரை அதிகாரிகளை அழைத்துக்கொண்டு சம்மந்தப்பட்ட கிராமத்திற்குச் சென்ற ஆய்வு மேற்கொண்டார்.
இதனைத் தொடர்ந்து இச்செயலில் ஈடுபட்ட அடையாளம் தெரியாத நபர்கள் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டம் உள்ளிட்ட ஐந்து பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்து குற்றவாளிளை போலீசார் தேடி வருகின்றனர். இந்நிலையில், கடந்த 27ம் தேதி இறையூர் கிராமத்திற்குச் சென்ற மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு மற்றும் மாவட்ட எஸ்பி வந்திதா பாண்டே ஆகியோர் அப்பகுதி பொதுமக்களிடம் நேரடியாக விசாரணை மேற்கொண்டனர்.
அப்போது அப்பகுதியில் உள்ள அய்யனார் கோயிலுக்குள் சென்று வழிபாடு செய்ய பட்டியலின மக்களுக்கு அனுமதி மறுக்கப்படுவதாகவும், அங்குள்ள ஒரு தேநீர் கடையில் இரட்டை குவலை முறை பின்பற்றப்படுவதாகவும் புகார் தெரிவித்தனர். இதனைத் தொடர்ந்து உடனடியாக மாவட்ட ஆட்சியர் கவிதாராமு பட்டியல் இன மக்களை சம்பந்தப்பட்ட கோவிலுக்குள் அழைத்துச் சென்று வழிபாடு செய்ய வைத்தார். மேலும், மாவட்ட எஸ்பி வந்திதா பாண்டே உத்தரவின் பேரில் நான்கு பேர் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டம் உள்ளிட்ட பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து சிங்கம்மாள் மற்றும் தேநீர் கடை நடத்தும் மூக்கையா ஆகியோரைக் கைது செய்தனர்.
சமத்துவப் பொங்கல் விழா: இந்நிலையில், சம்பந்தப்பட்ட இறையூர் வேங்கைவயல் பகுதியில் உள்ள மக்களிடம் பிரச்சனைகள் ஏற்படாமல் இருக்கவும், ஒற்றுமை ஏற்படுத்திட வலியுறுத்தியும் இலுப்பூர் கோட்டாட்சியர் குழந்தைசாமி தலைமையில் சமரசக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் அப்பகுதியில் உள்ள அய்யனார் கோயிலில் மூன்று சமுதாய மக்களும் ஒன்றிணைந்து வழிபாடு நடத்த முடிவெடுக்க்பட்டது.
இதனை அடுத்து மேற்படி கோயிலில் மூன்று சமுதாய மக்களும் ஒன்றிணைந்து சமத்துவ பொங்கல் விழா நடத்த மாவட்ட நிர்வாகம் ஏற்பாடு செய்யப்பட்டது. பட்டியலின மக்களை வருவாய்த்துறையினரும் ஆதி திராவிட நலத்துறை அதிகாரிகளும் மேளதாளங்கள் முழங்க ஊர்வலமாக தட்டு தாம்பூலத்துடன் கோயிலுக்கு அழைத்துச் செல்லப்பட்டு மூன்று சமுதாய மக்களும் ஒன்றிணைந்து சமத்துவ பொங்கலிட்டு வழிபாடு செய்தனர். இந்நிகழ்வில், தமிழ்நாடு சுற்றுச்சூழல் துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன், கந்தர்வகோட்டை தொகுதி சட்டமன்ற உறுப்பினர் எம்.சின்னத்துரை, மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு, வருவாய்த்துறையினர், ஊரக வளர்ச்சித் துறையினர் காவல் துறையினர் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன்: இறையூர் கிராமத்தில் அனைத்து சமுதாய மக்களும் ஒன்றாக இணைந்து சமத்துவ பொங்கல் விழாவை நடத்தியுள்ள நிகழ்ச்சி பாராட்டத்தக்கது. மனிதாபிமானமற்ற வகையில் குடிநீர்த் தொட்டியில் மனிதக்கழிவை கலந்த செயலை யார் செய்தாலும் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். மனிக்கழிவு கலக்கப்பட்ட குடிநீர் தொட்டிக்கு பதிலாக புதிய மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி விரைவில் கட்டித்தரப்படும். இதுபோன்ற மற்றொரு சம்பவம் அரங்கேறாமல் இருக்க மனிதர்கள் மனதில் மாற்றம் ஏற்பட வேண்டும், யாதும் ஊரே யாவரும் கேளிர் என்ற தத்துவத்தின் அடிப்படையில் ஒவ்வொருவரும் மற்றவர்களை மதிக்க கூடிய வகையில் செயல்பட்டால் இது போன்ற நிகழ்வு நடைபெறாது என்றார்.
கந்தர்வக்கோட்டை சட்டமன்ற தொகுதி உறுப்பினர் எம்.சின்னத்துரை கூறுகையில்: இறையூர் கிராமத்தில் நடைபெற்ற இந்த கொடூர செயலில் ஈடுபட்டவர்கள் யாராக இருந்தாலும் தயவு தாச்சனையின்றி கடுமையாக நடவடிக்கை எடுக்க வேண்டும். இதுபோன்ற சம்பவம் அரங்கேறாமல் இருப்பதை உறுதி செய்ய வேண்டும். மேலும் பட்டியலின மக்களை கோவிலுக்குள் அழைத்துச் சென்று வழிபாடு செய்ய நடவடிக்கை மேற்கொண்ட மாவட்ட ஆட்சியர் உள்ளிட்ட அதிகாரிகளுக்கும், நிகழ்வில் கலந்கொண்ட அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதனுக்கும் நன்றியைத் தெரிவித்துக் கொள்வதாகக் கூறினார்.
சிபிஎம் சார்பில் நடைபெறும் ஆர்ப்பாட்டம் - மாநிலச்செயலர் கே.பாலகிருஷ்ணன் பங்கேற்பு:
பட்டியலின மக்களுக்கான குடிநீர்த் தொட்டியில் மனிதக்கழிவை கலந்த குற்றவாளிகளைக் கண்டுபிடித்து கைது செய்யப்படாததைக் கண்டித்தும், விரைந்து நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் வெள்ளிக்கிழமை (டிச.30) காவேரி நகரில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது. இந்த ஆர்ப்பாட்டத்தில் கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் பங்கேற்கிறார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu