உலக தண்ணீர் நாளை முன்னிட்டு சிறப்பு கிராம சபைக்கூட்டம்
புதுக்கோட்டை அருகே ௯பி நத்தம்பண்ணை ஊராட்சியில் ஆட்சியர் கவிதா ராமு முன்னிலையில் நடைபெற்ற உலக தண்ணீர் நாள் சிறப்பு கிராமசபைக்கூட்டம்
உலக தண்ணீர் தினத்தை முன்னிட்டு 9பி நத்தம்பண்ணை ஊராட்சியில் கிராம சபைக்கூட்டம் நடைபெற்றது.
புதுக்கோட்டை மாவட்டம், ஒன்றியம், 9பி நத்தம்பண்ணை ஊராட்சியில் உலக தண்ணீர் தினத்தை முன்னிட்டு நடைபெற்ற கிராம சபைக் கூட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் கவிதா ராமு, புதுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் டாக்டர்.வை.முத்துராஜா ஆகியோர் கலந்து கொண்டனர்.
உலக தண்ணீர் தினமான இன்று 22.03.2023 புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள 497 கிராம ஊராட்சிகளிலும் கிராம சபைக்கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் உலக தண்ணீர் தினத்தின் கருப்பொருளினை பற்றி விவாதித்து, கிராம ஊராட்சி நிர்வாகம் மற்றும் பொதுநிதி செலவினம், கிராம ஊராட்சியின் தணிக்கை அறிக்கை, சுத்தமான குடிநீர் விநியோகத்தினை உறுதி செய்வது, அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டம், கிராம வளர்ச்சி திட்டம் தூய்மை பாரத இயக்கம் (ஊரகம்) சுகாதாரம், ஜல் ஜீவன் இயக்கம், திறந்த வெளியில் மலம் கழித்தலற்ற நிலையுடன் திட மற்றும் திரவக் கழிவு மேலாண்மையில் தன்னிறைவு பெற்றுள்ள கிராமங்களை அறிவித்தல் மற்றும் இதரப் பொருட்கள் குறித்து விவாதிக்கப்பட்டன.
இக்கூட்டத்தில் அரசின் பல்வேறு திட்டங்கள் மற்றும் ஊராட்சியின் செயல்பாடுகள் பற்றிய விபரங்களை தெரிந்து கொண்டு பயன்பெறும் வகையில் பொதுமக்கள், மகளிர் சுயஉதவிக் குழுக்களைச் சார்ந்தவர்கள், மாற்றுத் திறனாளிகள் மற்றும் தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் பலர் கலந்து கொண்டனர்.
இக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்ததாவது:மழைநீர் சேகரிப்பு அவசியம் குறித்தும், தூய்மையான குடிநீரின் அவசியம் குறித்தும் பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் உலக தண்ணீர் தினத்தை முன்னிட்டு இன்று அனைத்து ஊராட்சியளிலும் கிராம சபை கூட்டம் நடத்தப்படுகிறது.
மேலும் நீரின்றி அமையாது உலகு என்ற வள்ளுவரின் வாய் மொழிக்கு ஏற்ப நீரின் முக்கியத்துவத்தை உணர்ந்து பொதுமக்கள் அனைவருக்கும் அரசு கட்டிடங்கள் மட்டுமல்லாமல் தனியார் நிறுவனங்கள் மற்றும் தங்களது வீடுகள் உள்ளிட்ட அனைத்திலும் மழைநீர் சேகரிப்பு அமைப்புகளை ஏற்படுத்த வேண்டும். பொதுமக்களுக்கு தூய்மையான குடிநீர் வழங்கும் பொருட்டு ஜல் ஜீவன் மிஷன் மூலம் பொதுமக்கள் இல்லங்களுக்கு பாதுகாக்கப்பட்ட குடிநீர் வழங்கப்படுகிறது.
மேலும் பொதுமக்களுக்கு குடிநீர் வழங்கும் மேல்நிலை நீர் தேக்க தொட்டிகள் அனைத்தும் 15 நாட்களுக்கு ஒரு முறை சுத்தம் செய்யப்பட்டு, குடிநீரில் குளோரிநேசன் செய்யப்படுகிறது. மேலும் இப்பகுதி பொதுமக்கள் தெரிவித்துள்ள குடிநீர் வசதி, சாலை வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகளை மேம்படுத்தும் வகையில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். எனவே பொதுமக்கள் அனைவரும் தண்ணீரின் அருமை கருதி தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்தவும், அரசின் திட்டங்களை முழுமையாக தெரிந்து கொண்டு அவற்றின் மூலம் பயனடைந்து, தங்கள் வாழ்வாதாரத்தை மேம்படுத்திக் கொள்ளவும் வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் கவிதா ராமு தெரிவித்தார்.
இக்கூட்டத்தில் பொதுமக்கள் அடிப்படை வசதிகள், ஊரணி மேம்பாடு, சாலை வசதி, குடிநீர் வசதி போன்ற பொதுமக்களின் கோரிக்கைகளின் மீது சம்மந்தப்பட்ட அலுவலர்கள் உடனடி நடவடிக்கை மேற்கொள்ளுமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் அறிவுறுத்தினார்கள்.
இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் மா.செல்வி, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் நா.கவிதப்பிரியா, ஒன்றியக்குழுத் தலைவர் சின்னையா, வருவாய் கோட்டட்சியர் முருகேசன், உதவி இயக்குநர் (ஊராட்சிகள்) (பொ) பழனிச்சாமி, முதன்மைக் கல்வி அலுவலர் சே.மணிவண்ணன், கால்நடை பராமரிப்புத்துறை இணை இயக்குநர் மரு.சம்பத், இணை இயக்குநர் (வேளாண்மை) பெரிசாமி, சுகாதாரப்பணிகள் துணை இயக்குநர் மரு.ராம்கணேஷ், துணை இயக்குநர்(தோட்டக்கலை) குருமணி, வட்டார வளர்ச்சி அலுவலர் குமாரவேலன், வட்டாட்சியர் விஜயலெட்சுமி, ஊராட்சி மன்றத் தலைவர் சுசிலாசேதுராமன், மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டார்கள்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu