நீலகிரி சுற்றுலா தலங்களில் இன்று முதல் புதிய கட்டுப்பாடுகள் அமல்
நேர கட்டுப்பாடுகளுடன் சுற்றுலாத்தலங்கள் திறக்கப்பட்டுள்ளதால் மாவட்டத்தில் சுற்றுலாப் பயணிகளின் வருகை குறைந்துள்ளது.
HIGHLIGHTS
தமிழகத்தில் கொரோனா அதிகரித்துள்ள நிலையில் நேர கட்டுப்பாடுகளுடன் கூடிய ஊரடங்கை தமிழக அரசு பிறப்பித்துள்ளது. இதையடுத்து நீலகிரி மாவட்டத்தில் அனைத்து சுற்றுலா தலங்களிலும் நேரக் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. அதன்படி இன்று முதல் பொழுதுபோக்கு பூங்காக்கள் மற்றும் படகு இல்லங்களில் காலை 10 மணி முதல் 3 மணி வரை மட்டுமே சுற்றுலாப் பயணிகள் அனுமதிக்கப்படுவர் என மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.
அதன்படி உதகை தாவரவியல் பூங்கா , ரோஜா பூங்கா , படகு இல்லம், பைக்காரா படகு இல்லம் உள்ளிட்ட அனைத்து சுற்றுலா தலங்களிலும் இன்று காலை 10 மணிக்கு சுற்றுலா பயணிகள் அனுமதிக்கப்பட்டனர். முன்னதாக நுழைவுச் சீட்டு வழங்கும் இடத்தில் சுற்றுலாப் பயணிகள் இரண்டு தவணை தடுப்பூசி செலுத்தியதற்கான சான்றுகள் மற்றும் செல்போன்களில் குறுந்தகவல் காண்பித்த பின் அனுமதிக்கப்பட்டனர்.
அரசு விதித்துள்ள வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்ற சுற்றுலாப்பயணிகள் அனைவரும் கட்டுப்பாடுகளை கடைபிடிக்க வேண்டும் என அனைத்து சுற்றுலாத் தலங்களிலும் அந்தந்த நிர்வாகங்கள் அறிவுறுத்தியுள்ளன. நேர கட்டுப்பாடுகளுடன் சுற்றுலாத்தலங்கள் திறக்கப்பட்டுள்ளதால் மாவட்டத்தில் சுற்றுலாப்பயணிகளின் வருகை குறைந்துள்ளது.