மகளை பாலியல் துன்புறுத்தல் செய்த தந்தைக்கு ஆயுள் தண்டனை
கடந்த 2017 ம் ஆண்டு பெற்ற மகளையே 3 ஆண்டுகளாக பாலியல் துன்புறுத்தல் செய்த தந்தைக்கு ஆயுள் தண்டனையும், ரூ. 10 லட்சம் அபராதம் விதித்து உதகை மகிளா நீதிமன்ற நீதிபதி அருணாச்சலம் தீர்ப்பளித்தார்.
நீலகிரி மாவட்டம் கூடலூர் கோத்தர்வயல் பகுதியை சேர்ந்த அப்துல்லா நாசர் (44). துணி வியாபாரி. இவருக்கு திருமணமாகி 1 ஆண் மற்றும் 11 வயதில் பெண் குழந்தை உள்ளனர். மனைவி இல்லாத நேரத்தில் தன் மகளையே 3 ஆண்டுகளாக பலமுறை அப்துல்லா பாலியல் தொந்தரவு செய்துள்ளார்.
மேலும் இதுகுறித்து தாயிடமோ, உறவினர்களிடமோ கூறினால் கொலை செய்து விடுவதாக மிரட்டியுள்ளார். இதற்கு பயந்து அச்சிறுமி யாரிடமும் கூறாமல் இருந்துள்ளார் .இந்நிலையில் சிறுமியின் தாய் வழி தாத்தா வீடு கேரளாவில் உள்ளதால் தனது சித்தி துபாயில் இருந்து கேரளாவுக்கு வந்துள்ளதால் தாத்தா வீட்டிற்கு சென்றுள்ளார்.மீண்டும் அங்கிருந்து கூடலூருக்கு செல்லுமாறு சிறுமியிடம் கூறிய போது தனது தாத்தாவிடம் தனக்கு நேர்ந்த கொடுமையை கூறினார் .
இதனை கேட்ட அவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக கேரளாவில் உள்ள மருத்துவமனைக்கு சிறுமியை கூட்டி சென்ற போது அங்கு சிறுமியை பரிசோதனை செய்த மருத்துவர்கள் உடலில் பல காயங்கள் இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர் மேலும் பல முறை பாலியல் தொல்லை செய்திருப்பதும் தெரிய வந்தது. கடந்த 21.9.2017 அன்று கூடலூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் சிறுமி புகார் அளித்ததன் பேரில் இன்ஸ்பெக்டர் மீனாகுமாரி ,சப்-இன்ஸ்பெக்டர் சோனா ஆகியோர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
விசாரணையில் சிறுமியின் தந்தை குற்றத்தை ஒப்புக் கொண்டதின் பேரில் இந்த வழக்கு ஊட்டி மகளிர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கு இன்று மகிளா நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது . வழக்கை விசாரித்த நீதிபதி அருணாச்சலம் சிறுமியை பாலியல் துன்புறுத்தல் செய்த குற்றவாளி தந்தைக்கு ஆயுள் தண்டனையும் 10 லட்சம் அபராதமும் விதித்து தீர்ப்பளித்துள்ளதாகவும் அபராத தொகை செலுத்தாத பட்சத்தில் மேலும் 5 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கி நீதிபதி அருணாச்சலம் தீர்ப்பளித்துள்ளதாக இவ்வழக்கில் வாதாடிய அரசு வழக்கறிஞர் மாலினி பிரபாகரன் தெரிவித்தார்.