குமாரபாளையத்தில் விநாயகர் சிலைகள் விற்பனை தீவிரம்

குமாரபாளையத்தில் விநாயகர் சிலைகள் விற்பனை தீவிரம்
X

குமாரபாளையத்தில் விநாயகர் சிலைகள் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன.

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு குமாரபாளையத்தில் விநாயகர் சிலைகள் விற்பனை தீவிரமாக நடந்து வருகிறது.

விநாயகர் சதுர்த்தி விழாவிற்கு குமாரபாளையத்தில் பக்தர்கள் பெரிய அளவிலான விநாயகர் சிலைகளை ஒவ்வொரு வீதியிலும் கொலு வைத்து ஊர்வலமாக கொண்டு சென்று காவிரி ஆற்றில் கரைப்பார்கள். செப். 18ல் விநாயகர் சதுர்த்தி வருவதையொட்டி விநாயகர் சிலைகள் விற்பனை தற்போது தொடங்கியுள்ளது.

இது குறித்து சிலைகள் விற்பனையாளர் கூறியதாவது:

விநாயகர் சதுர்த்தி விழாவையொட்டி குமாரபாளையம் பகுதியில் பல கடைகள் அமைக்கப்பட்டு பல ஆயிரத்திற்கும் மேற்பட்ட சிலைகள் விற்பனை செய்யப்படுவது வழக்கம். இந்த சிலைகள் விழுப்புரம், அகரம், பண்ருட்டி, மதுராந்தகம், செங்கல்பட்டு, திருவண்ணாமலை உள்ளிட்ட பல ஊர்களில் உற்பத்தி செய்யப்படுகிறது. இதனை மாநிலம் முழுதும் உள்ள சிலை வியாபாரிகள் வாங்கி சென்று, சிலையின் பாகங்களை ஒன்றிணைத்து, வர்ணம் தீட்டி, விற்பனை செய்வது வழக்கம்.

இந்த ஊர்களில் இருந்த பல சிலை உற்பத்தியாளர்கள் கொரோனா பாதிப்பால் காலமான நிலை ஏற்பட்டது. இவர்களின் வாரிசுகளும் இந்த தொழில் செய்ய முன்வருவது இல்லை. அதனால் சிலை தயாரிப்பவர் எண்ணிக்கை குறைந்து விட்டது.

மேலும் சிலைகளின் உற்பத்தி மூலப்பொருட்களின் விலை உயர்வு காரணமாக, சிலைகளின் விலை தற்போது இரு மடங்காக கூறி வருகின்றனர். ஐந்து அடி சிலை முன்பு மூவாயிரம் என்றால் தற்போது ஆறாயிரம், எட்டு அடி சிலை ஆறாயிரம் என்றால் தற்போது ஒன்பதாயிரம் என, ஒவ்வொரு அளவு சிலைகளுக்கும் விலை அதிகரித்துள்ளது.

ஏற்கனவே இருந்த விலைக்கே அதிக லாபம் இல்லாமல் அசல் விலைக்கு கூட விற்பனை செய்து வந்தோம். தற்போது சிலையின் விலை இரு மடங்காக உயர்ந்த நிலையில் சிலை வியாபாரம் செய்வதா? வேண்டாமா? என எண்ணத் தோன்றுகிறது. மேலும் இந்த சிலைகளை எப்போதும் இல்லாத அளவில், கர்நாடக வியாபாரிகள் முன்பணம் கொடுத்து சிலைகள் ஆர்டர் செய்து உள்ளனர்.

காவிரி நீருக்கு தான் அவர்கள் போட்டி என்றால், விநாயகர் சிலைக்கும் அவர்கள் போட்டிக்கு வந்து விட்டார்கள். இந்த ஆண்டு விநாயகர் சதுர்த்தி விழா செப். 18ல் வருகிறது. அதிக விலை கொடுத்து எப்படி வாங்கி, எப்படி விற்பது என புரியாத நிலை நீடித்து வருகிறது. இருப்பினும் ஆண்டுதோறும் விநாயகர் கொலு வைப்பவர்கள் எதோ ஒரு சிலை வைத்து வழிபாடு நடத்தாமல் இருக்க முடியுமா? என சிலைகள் வாங்க ஆர்வம் காட்டி வருகிறார்கள் என்று கூறினார்

Tags

Next Story
ai in future agriculture