குமாரபாளையத்தில் நவராத்திரி விழா சிறப்பு வழிபாடுகள்!
படவிளக்கம் : குமாரபாளையம் சவுண்டம்மன் கோவிலில் அம்மன் காசி விசாலாட்சி அம்மன் அலங்காரத்தில் அருள்பாலித்தார்.
குமாரபாளையம் நகரில் அனைத்து அம்மன் கோவில்களில் நவராத்திரி விழா சிறப்பாக நடைபெற்று வருகிறது.
நவராத்திரி விழாவையொட்டி குமாரபாளையம் கோட்டைமேடு காளியம்மன் கோவிலில் அம்மனுக்கு சிறப்பு அபிஷேக, அலங்கார, ஆராதனை நடைபெற்றது. இதே போல் சேலம் சாலை, ராஜா வீதி சவுண்டம்மம் கோவில்கள், அம்மன் நகர் எல்லை மாரியம்மன் கோவில், அங்காளம்மன் கோவில்கள், மாரியம்மன் கோவில்கள், திருவள்ளுவர் நகர் மங்களாம்பிகை கோவில், அக்ரஹாரம் காசி விஸ்வேஸ்வரர் கோவில், பட்டத்தரசியம்மன் கோவில், கள்ளிப்பாளையம் மாரியம்மன், காளியம்மன் கோவில், பண்ணாரி மற்றும் சமயபுரம் மாரியம்மன் கோவில்களில் சுவாமிகளுக்கு சிறப்பு அபிஷேக, அலங்கார, ஆராதனைகள் நடத்தப்பட்டன. பக்தர்களுக்கு பிரசாதம் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது.
நவராத்திரி குறித்து ஆன்மீக அன்பர்கள் கூறியதாவது:
நவராத்திரி விழா என்பது மக்களை துன்புறுத்தி வந்த மகிசாசுரன் என்ற அரக்கனுடன், ஆதிபராசக்தி 9 நாள்கள் போரிட்டு 10ஆவது நாளில் அவனை வதம் செய்து வெற்றிகொண்டதாக நம்பப்படுகிறது. இதனை நினைவுகூரும் வகையில் நவராத்திரி விழா கொண்டாடப்பட்டு வருகிறது.
நவராத்திரியில் பராசக்தியான துர்கா பரமேஸ்வரியையும், மகாலஷ்மியையும், சரஸ்வதி தேவியையும் பூஜிக்கிறோம். பாராசக்தி மூன்றாக இருந்தாலும், முப்பத்து முக்கோடியாக இருந்தாலும், அத்தனையாகவும் இருப்பது ஒரே பராசக்திதான்.
நவராத்திரி பண்டிகை உலக நலத்துக்காக, தன்னை நம்பும் பக்தர்களுக்காக ஸ்ரீமஹாதேவி பிரசன்னாமாகி மகிஷாசுரவதம் நடத்தி, தன் குழந்தைகளை எப்படியும் காப்பாற்றுவேன் என்று பறைசாற்றும் நாளே விஜயதசமி நன்நாளாகும். நம் தாய் ஆதிபராசக்தியே லக்ஷ்மி, சரஸ்வதி, பார்வதி என முப்பெரும் தேவிகளாக ரூபம் கொண்டு வாழத் தேவையான ஐஸ்வர்யம், ஞானம், வீரம் போன்றவற்றை அருள்கிறாள். அன்பின் சொரூபமான அவள் நம்மிடம் எதிபார்ப்பது ‘ஆத்ம சரணாகதி' என்ற தூய அன்பை மட்டுமே.
நவராத்திரி கொலுவில் இடம்பெறும் பிரமாண்டமான மலைகள், பலவகையான பாதாள குகைகள், நிறைய நீர்வீழ்ச்சிகளுடனான ஆறுகள், எரிமலை நெருப்பு, ஹோமகுண்ட அக்னியுடனா புகைமண்டலம், பாற்கடலில் மகாவிஷ்ணு, தியானசக்தி அதிர்வுகளுடன் சமுத்ரம், பிரமீடு குகை சப்தங்கள், புயல் மற்றும் தென்றல் காற்று சக்தி, பலவித மிருகங்கள் பறவைகள் சத்தத்துடனான சந்தனகாடு, ஐஸ்வர்யலஷ்மி குகை, மஹாகாளியின் ராட்ஷசசம்ஹார மஹிஷாசுரமர்த்தினிக் கோலம், சம்ஹாரகோலம், மலைகுகைகள், ஆற்று ஊற்றுக்கள், ருத்திராட்ச மரங்கள், மற்றும் பலவித அதிசய சக்தி வாய்ந்த தெய்வீகப் பொருட்களுடன் பிரபஞ்சசக்தியை கொணர்ந்து; வீட்டு கொலுவில் வைத்து பூஜிப்பதால் அம்பாளின் அருளை பெறலாம்.
இந்த மாபெரும் பிரபஞ்ச சக்தியும் மற்றும் நம் ஆதார சக்தியான ஸ்ரீமஹாமாயி விஷ்வரூபிணி தாயின் முழு அருளை இந்த நவராத்திரி நாட்களில் அனைவரும் பெறவேண்டும்.
ஒருவர் இந்த நவராத்திரியில் தன் வீட்டீலேயே மாபெரும் பிரபஞ்ச சக்தியையும் ஐம்பூத சக்திகளையும் தருவித்து தெய்வீகசக்தியை நிலைப்பெறச் செய்து, ஆனந்தமாக வாழ நினைத்தால் நவராத்திரி பூஜையை மேற்கொள்வது நல்லது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu