நான் முதல்வன் திட்டம்: பள்ளி மாணவிகளை வரவேற்றார் அரசு கல்லூரி முதல்வர்

குமாரபாளையம் அரசு கலை அறிவியல் கல்லூரிக்கு வருகை தந்த திருச்செங்கோடு அரசு பள்ளி மாணவ, மாணவியர்களை கல்லூரி முதல்வர் ரேணுகா மலர்கள் கொடுத்து வரவேற்றார்.
குமாரபாளையம் அரசு கல்லூரிக்கு வந்த அரசு பள்ளி மாணவ மாணவிகளுக்கு கல்லூரி முதல்வர் மலர்கள் கொடுத்து வரவேற்றார்.
தமிழக அரசின் நான் முதல்வன் திட்டத்தின் மூலம், பிளஸ் 2 படித்த மாணவ, மாணவியர்கள், உயர்கல்வி பயில, வழிகாட்டுதல் களப்பயணம் என்ற அடிப்படையில் திருச்செங்கோடு மற்றும் சுற்று வட்டார பகுதியில் உள்ள அரசு பள்ளி மாணவ, மாணவியர் 100 பேர், குமாரபாளையம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிக்கு வருகை தந்தனர். இவர்களை அரசு கல்லூரி மாணவ, மாணவியர் நடனத்துடன் வரவேற்றனர். கல்லூரி முதல்வர் ரேணுகா அனைவருக்கும் மலர்கள் கொடுத்து வரவேற்றார்.
இதனை தொடர்ந்து கூட்ட அரங்கில் நடைபெற்ற நிகழ்வில், எதற்காக இந்த பயணம்? என்பது குறித்து முதல்வர் ரேணுகா விளக்கி பேசினார். அதன் பின் வகுப்பறையில் பாடங்கள் நடத்தும் முறை, நூலகம், ஆய்வகம், விளையாட்டு மைதானம் உள்ளிட்டவைகளை நேரில் அழைத்து சென்று காட்டினர்.
இது குறித்து கல்லூரி முதல்வர் ரேணுகா கூறியதாவது:-
அரசு பள்ளி மாணவ, மாணவியர்கள், அரசு கல்லூரியில் உள்ள வசதிகள், கற்றுக்கொடுக்கும் தன்மைகள் குறித்து அறியச்செய்து, அவர்களை அரசு கல்லூரியில் உயர்கல்வி பயில வைக்க வேண்டும் என்பதற்காக இந்த நிகழ்வு அரசு உத்தரவின்படி நடத்தப்பட்டது. பேராசிரியர்கள் ரகுபதி, கீர்த்தனா ஆகியோர் மாணவர்களுக்கு வழிகாட்டினர்.
இவ்வாறு அவர் கூறினார்.
நான் முதல்வன் திட்டங்கள் குறித்து பள்ளி ஆசிரியர்கள் கூறியதாவது:-
தமிழகத்தின் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியர்கள் மற்றும் இளைஞர்கள், படிப்பில் மட்டுமல்லாது, வாழ்க்கையிலும் வெற்றி பெறும் வகையில் நான் முதல்வன் என்ற திறன் மேம்பாட்டு மற்றும் வழிகாட்டுதல் திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. இதற்கென naanmudhalvan.tnschools.gov.in என்ற இணையதளம் உருவாக்கப்பட்டுள்ளது.
9 முதல் 12 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கான உயர்கல்வி படிப்புகள், அவை தொடர்பான வேலைவாய்ப்புகள் பற்றிய தகவல்களை எளிதில் பெறும் வகையில் வழங்குவதே நான் முதல்வன் இணைய முகப்பின் நோக்கமாகும். மாணவர்களுக்கான நுழைவுத் தேர்வுகள், கல்வி உதவித்தொகை, கல்விக் கடன் குறித்த உடனடித் தகவல்களும் இங்கு கிடைக்கும்.
நான் முதல்வன் இணைய முகப்பில் 2000க்கும் மேற்பட்ட கல்வி நிறுவனங்களும், இந்நிறுவனங்கள் வாயிலாக பெறக்கூடிய 300க்கும் மேற்பட்ட தொழில் சார்ந்த வழிகாட்டுதல்களும் அடங்கும். நாடு முழுவதும் உள்ள 150-க்கும் மேற்பட்ட உயர்கல்விக்கான உதவித் தொகைகளின் தகவல்களும் இந்த இணைய முகப்பில் உள்ளன.
நான் முதல்வன் திட்டத்தின் முக்கிய நோக்கம், ஆண்டுக்குப் பத்து இலட்சம் இளைஞர்களைப் படிப்பில், அறிவில், சிந்தனையில், ஆற்றலில், திறமையில் மேம்படுத்தி நாட்டுக்கு வழங்குதல் ஆகும்.
இந்தத் திட்டத்தின் சிறப்பம்சமானது, அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி, கல்லூரி, பல்கலைக்கழக மாணவ, மாணவியர்களின் தனித் திறமைகளை அடையாளம் கண்டு அதனை மேலும் ஊக்குவிப்பது ஆகும். அடுத்தடுத்து அவர்கள் என்ன படிக்கலாம், எங்கு படிக்கலாம், எப்படிப் படிக்கலாம் என்றும் வழிகாட்டப்படும்.
தமிழில் தனித் திறன் பெற சிறப்புப் பயிற்சியுடன், ஆங்கிலத்தில் எழுதவும், சரளமாகப் பேசுவதற்கும், நேர்முக தேர்வுக்கு தயாராவது குறித்தும் பயிற்சிகள் வழங்கப்படும்.
தற்போதைய தொழில்நுட்ப வளர்ச்சிக்கேற்ப பள்ளி மாணவ, மாணவியர்களுக்கு Coding, Robotics போன்ற பயிற்சி வகுப்புகள் நடத்தப்படும். ஒவ்வொரு துறையிலும் தலைசிறந்த சாதனையாளர்களைக் கொண்டு கோடை சிறப்பு வகுப்புகள் நடத்தப்படும்.
இவற்றைத் தவிர, மனநல மருத்துவர்கள், உடல்நல மருத்துவர்களைக் கொண்டு திடமான உணவு வகைகள் உட்கொள்வது குறித்து ஆலோசனைகள் வழங்குவதுடன், உடற்பயிற்சி, நடை, உடை, நாகரீகம், மக்களோடு பழகுதல், ஆகியவை குறித்தும் பயிற்சிகள் வழங்கப்படும். தமிழ் பண்பாடு, மரபு குறித்த விழிப்புணர்வும் மாணவ, மாணவியர்களிடம் ஏற்படுத்தப்படும்.
இப்பயிற்சிகள் அனைத்தும், தலைசிறந்த பயிற்சியாளர்களைக் கொண்டு நேரடிப் பயிற்சி, இணைய வழிப் பயிற்சி, அவரவர் கல்லூரியில் பயிற்சி, மாவட்ட ரீதியாக பயிற்சி என தேவைக்கேற்ப பயிற்சிகள் அளிக்கப்படும். ஒவ்வொரு பள்ளியிலும் வழிகாட்டி ஆலோசனை மையம் உருவாக்கப்படும். இதற்கென தனியே கலைத்திட்டம் மற்றும் பாடத்திட்டம் உருவாக்கப்பட்டு 9 முதல் 12 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவியர்களுக்கு தொடர் வகுப்புகள் நடத்தப்படும். முன்னாள் மாணவர்களைக் கொண்டு அரசுப் பள்ளியில் பயிலும் மாணவ, மாணவியர்களுக்கு தொடர் நெறிப்படுத்தும் (Mentoring) முறையும் அறிமுகப்படுத்தப்படும். கல்லூரி மாணவ, மாணவியர்களுக்கு வெளிநாடுகளில் வேலைவாய்ப்யை உறுதி செய்ய அவரவர் விருப்பத்திற்கேற்ப அயல்நாட்டு மொழிகள் கற்பிக்கப்படுவதற்கு இத்திட்டத்தில் வழிவகை செய்யப்படும்.
அரசினர் தொழிற்பயிற்சி நிலையங்கள் 4.0 தரத்திற்கு உயர்த்தப்படும். மாணவ, மாணவியர்களின் தகுதி மற்றும் ஆர்வத்திற்கு ஏற்ப, நாட்டின் தலைசிறந்த நிறுவனங்கள் / புகழ்பெற்ற பல்கலைக்கழகங்கள் / திறன் மேம்பாட்டு நிறுவனங்களில் சேர்க்கையையும் இந்தத் தொடர் பயிற்சிகள் மூலம் உறுதி செய்யப்படும்.
தமிழ்நாடு அரசுத்துறை மற்றும் நிறுவனங்களில் வேலைவாய்ப்புகள், ஒன்றிய அரசின் வேலைவாய்ப்புகள், பிற மாநிலங்களின் வேலைவாய்ப்புகள் ஆகிய அனைத்தும் இத்திட்டத்தின் கீழ் அறிவிப்புகளாக வெளியிடப்பட்டு, பயிற்சிகள் ஒருங்கிணைக்கப்படும். பயிற்சி பெற்ற பயனாளிகள் வேலைவாய்ப்பு பெறுவதையும், அதைத் தொடர்வதையும், தொடர்ந்து கண்காணிக்கப்படும். இதைத் தவிர, ஒருங்கிணைந்த வேலைவாய்ப்பு முகாம்களும் தேவைகளின் அடிப்படையில் நடத்தப்படும். இத்திட்டத்தின் அனைத்து விவரங்களும் அடங்கிய வலைதள பலகை உருவாக்கப்படும்.
தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் நேரடி கண்காணிப்பில், சிறப்புத் திட்ட செயலாக்கத் துறை இப்புதிய திட்டமான நான் முதல்வன் திட்டத்தை ஒருங்கிணைக்கும். மேலும், மாவட்டங்களில் மாவட்ட ஆட்சியர் தலைமையிலான குழு இத்திட்டத்தை செயல்படுத்துகிறது.
இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu