குமாரபாளையம் காவிரி ஆற்றில் பூஜை நடத்தி ஆடிப்பெருக்கு விழா கொண்டாட்டம்

குமாரபாளையம் காவிரி ஆற்றில் பூஜை நடத்தி ஆடிப்பெருக்கு விழா கொண்டாட்டம்
X

குமாரபாளையம் காவிரி ஆற்றில் பக்தர்கள் வழிபாடு செய்த காட்சி.

குமாரபாளையம் காவிரி கரையில் பக்தர்கள் காவிரி தாய்க்கு சிறப்பு பூஜைகள் நடத்தி வழிபாடு செய்தனர்.

ஆடி 18 என்பது ஆடிப்பெருக்கு விழா கொண்டாடும் நாளாகும். அன்றைய தினம் காவிரி தாய்க்கு நன்றி செலுத்தும் விதமாக பக்தர்கள் காவிரி கரையில், வாழைஇலையில் தேங்காய், வாழைப் பழங்கள், வெற்றிலை பாக்கு, ஊறவைத்த அரிசி, நாட்டு சர்க்கரை கலவை, ஆப்பிள், ஆரஞ்சு, மாதுளை உள்ளிட்ட பழ வகைகள், ஆகியன படையலிட்டு கற்பூர ஆரத்தி காட்டி வழிபடுவார்கள்.

இதில் வைக்கப்படும் மஞ்சள் கயிறு மகத்துவம் வாய்ந்தது. அதனால் புதிதாக திருமணம் ஆன பெண்கள் பழைய தாலி கயிற்றை அகற்றி, இந்த பூஜையில் வைக்கப்பட்ட மஞ்சள் கயிற்றினை மாற்றி அணிந்து கொள்வார்கள். இன்று ஆடி 18 என்பதால் குமாரபாளையம் காவிரி கரை பகுதியில் பக்தர்கள் காவிரி தாய்க்கு சிறப்பு வழிபாடு நடத்தினர். கூட்டம் அதிகம் இருந்ததால், அசம்பாவிதம் ஏற்படாமல் இருக்க குமாரபாளையம் தீயணைப்பு படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

ஆடி மாதத்தில் அனைத்து மக்களும் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருந்து, சிறப்பாக கொண்டாடும் ஒரு நாள் ஆடிப்பெருக்கு திருநாளாகும். ஆடிப்பெருக்கு, ஆடி பதினெட்டு, ஆடி பதினெட்டாம் பெருக்கு என பல பெயர்களால் அழைக்கப்படுகிறது. தமிழகம் முழுவதும் நதித்துறைகளில், ஆறுகளுக்கு நன்றி செலுத்தும் விழாவாக கொண்டாடப்படுவது வழக்கம். உழவு தொழிலுக்கு ஆதாரமாக விளங்கும் நீர் நிலைகளை வணங்கி, பூஜை செய்யும் திருநாள் இந்த ஆடிப் பெருக்கு நாளாகும்.

பொதுவாக ஆடி மாதத்தில் சுப காரியங்கள் எதுவும் செய்யக் கூடாது என்பார்கள். அப்படிப்பட்ட ஆடி மாதத்தில் அனைத்து நல்ல காரியங்களையும் துவங்கலாம், செய்யலாம் என சிறப்பித்து சொல்லப்படும் நாள் ஆடி பதினெட்டாம் பெருக்கு நாளாகும். இந்த நாளில் துவங்கப்படும் செயல்கள் அனைத்தும் பெருகி, வளரும் என்பது ஐதீகம். அதனால் தான் ஆடிப்பெருக்கு நாளில் திருமண பேச்சுக்கள், திருமணத்திற்கான ஏற்பாடுகள், திருமணத்திற்கு நகை வாங்குவது, புத்தாடை வாங்குவது, புதிய தொழில், கடை திறப்பது உள்ளிட்ட பல சுபகாரியங்களை செய்கிறார்கள்.

ஆடிப்பெருக்கு அன்று காவிரி ஆற்றங்கரையில் ஏராளமான மக்கள் ஒன்று கூடி, மஞ்சளில் பிள்ளையார் செய்து, தேய்காய், பழம், சர்க்கரை பொங்கல் படைத்து வழிபடுவார்கள். பெண்கள் பலர் புதிய தாலி கயிற்றை மாற்றிக் கொள்வார்கள். புதுமண தம்பதிகள் தங்களின் திருமண மாலையை பொங்கி வரும் காவிரி ஆற்றில் விட்டு, பூஜை செய்வார்கள். தாமிரபரணி ஆற்றங்கரையில் ஆடிப்பெருக்கு விழா சிறப்பாகக் கொண்டாடப்படும். ஆறுகள் உள்ள ஊர்களில் உள்ளவர்கள் நதித்துறையிலும், ஆறு இல்லாதவர்கள் குளக்கரையிலும் பூஜை செய்து வழிபடுவார்கள்

ஆறோ, குளமோ அருகில் இல்லாதவர்கள் வீட்டிலேயே ஆடிப்பெருக்கு பூஜையை செய்தும் வழிபாடு நடத்தலாம். ஆடிப்பெருக்கு நாளில் தங்கம் போன்ற விலை உயர்ந்த பொருட்கள் தான் வாங்க வேண்டும் என்ற அவசியம் கிடையாது. எளிமையாக ஏதாவது ஒரு மங்களகரமான பொருளை வாங்கி வீட்டில் வைத்தாலே போதும். மஞ்சள், உப்பு ஆகிய இரண்டு பொருட்களை அவசியம் வாங்க வேண்டும். இவற்றை வாங்கி வீட்டின் பூஜை அறையில் வைத்து வழிபட்ட பிறகு, அன்றாடம் சமையலுக்கு பயன்படுத்திக் கொள்ளலாம். இவ்வாறு மங்கள பொருட்கள் வாங்கி வைப்பதால் வீட்டில் ஆனந்தம், சுபிட்சம், மங்களம் பெருகும் என்பது நம்பிக்கை.

Tags

Next Story
மனித உணர்வுகளை புரிந்து கொள்ளும் AI பற்றி நீங்களும்  தெரிந்து கொள்ளுங்கள்!