குமாரபாளையம்: மனைவியை கொள்ளையர்கள் கொன்றதாக நாடகமாடிய கணவர் கைது
ஈரோடு மாவட்டம் அந்தியூரை சேர்ந்தவர் சபரிநாதன் (30). இவருக்கும், சேலம் மாவட்டம் ஆத்தூரை சேர்ந்த தரணிதேவிக்கும் (25) திருமணம் நடந்தது. இவர்களுக்கு ஒன்றரை வயதில் மகன் உள்ளான்.
இரு தினங்களுக்கு முன்பு, கணவன் - மனைவி இருவரும் காரில் அந்தியூருக்கு சென்றுள்ள்னர். குமாரபாளையம் கோட்டைமேடு பைபாஸ் சாலையில், காரில் இருந்த தரணிதேவியை தாக்கி, கொள்ளையர்கள்நகை பறித்துச் சென்றதாகவும், இதில் மனைவி இறந்துவிட்டதாகவும், போலீசில் சபரிநாதன் புகார் அளித்தார்.
இது குறித்து, குமாரபாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். சபரிநாதன் மீது சந்தேகப்பார்வை திரும்பியது. தீவிர விசாரணையில், மனைவி தரணி தேவியை தானே கொன்றதாக ஒப்புக் கொண்டார்.
போலீசாரிடம் சபரிநாதன் கூறியதாவது: திருமணத்திற்கு முன்பே, எனக்கும் திருமணமான ஒரு பெண்ணுக்கும் உறவு இருந்தது. எனக்கு திருமணமானதும் இதுபற்றி தரணிதேவிக்கு தெரிய வந்தது. இதனால், எங்களுக்குள் கருத்து வேறுபாடும், தகராறும் ஏற்பட்டுது. கடந்த 3 மாதங்களுக்கு முன்பு, தாய்வீட்டுக்கு தரணி தேவி சென்றுவிட்டார். அவரை சமாதானப்படுத்தி, காரில் அழைத்து வந்தேன். குமாரபாளையம் வைகுந்தம் சுங்கச்சாவடியில் வரும்போது, எங்களுக்குள் மீண்டும் வாக்குவாதம் ஏற்பட்டது. ஆத்திரத்தில், கழுத்தை நெரித்ததில் தரணி தேவி இறந்து விட்டார்.
பின்னர், அவரது நகைகளை ஓரிடத்தில் வைத்துவிட்டு, பவானி அரசு ஆஸ்பத்திரிக்கும், பின்னர் பெருந்துறை அரசு ஆஸ்பத்திரிக்கும் தரணி தேவியை கொண்டு சென்றேன். பரிசோதனையில், அவர் இறந்தது தெரிய வந்தது. கொலையில் இருந்து தப்பிக்க, கொள்ளையர்கள் நகையை பறித்து தரணி தேவியை கொன்றதாக நாடமாடினேன் என்றார்.
குமாரபாளையம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரவி தலைமையில் போலீசார் சபரிநாதன் பதுக்கி வைத்த இடத்தில் இருந்து நகையை மீட்டனர். பின்னர், சபரிநாதனை குமாரபாளையம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu