தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பயன்பாடு: குமாரபாளையத்தில் ஆய்வு

தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பயன்பாடு: குமாரபாளையத்தில் ஆய்வு
X

பிளாஸ்டிக் பயன்பாடு குறித்து, கடைகளில் ஆய்வு மேற்கொண்ட அதிகாரிகள். 

குமாரபாளையம் நகராட்சி மற்றும் மாசுக்கட்டுபாடு வாரியம் சார்பில், தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பயன்பாடு குறித்து சோதனை நடத்தப்பட்டது.

குமாரபாளையம் பகுதியில் ஓட்டல், பேக்கரிகள், துணிக்கடைகள் உள்ளிட்ட பல இடங்களில் ஒருமுறை பயன்படுத்தும் கேரி பேக் உள்ளிட்ட அரசால் தடை செய்யப்பட்ட பொருட்கள் பயன்படுத்தப்படுவதாக தகவல் வெளியானது. இதையடுத்து, நாமக்கல் கலெக்டர் உத்தரவின்பேரில், நகராட்சி, மாசுக்கட்டுபாடு அலுவலகம் சார்பில் பிளாஸ்டிக் பயன்பாடு குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

நகராட்சி கமிஷனர் சசிகலா, மாவட்ட மாசுக்கட்டுபாடு அலுவலர் செல்வகுமார் தலைமையில், சேலம் சாலை, பள்ளிபாளையம் சாலை, இடைப்பாடி சாலை உள்ளிட்ட பல இடங்களில் ஆய்வு நடைபெற்றது. ஓட்டல், பேக்கரிகள், துணிக்கடைகள், மளிகை கடைகள், டீக்கடைகள், பேன்சி ஸ்டோர் உள்ளிட்ட 75 கடைகளில் ஆய்வு செய்து, 5 கடைகளில் கேரி பேக், பிளாஸ்டிக் டம்ளர், உள்ளிட்ட 70 கிலோ அளவுள்ள பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்தாமல், இலைகள், துணிப்பைகள் உள்ளிட்டவைகள் பயன்படுத்த அறிவுறுத்தப்பட்டு, 7 ஆயிரத்து 500 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது. விதிமுறைக்கு மாறாக அரசால் தடை செய்யப்பட்ட பொருட்கள் வைத்திருந்தால் அபராதம் விதிப்பதுடன், கடைகள் சீல் வைக்கப்படும் எனவும் அறிவுறுத்தப்பட்டது. மாசுக்கட்டுபாட்டு உதவி பொறியாளர் கிருஷ்ணன், நகராட்சி சுகாதார அலுவலர் ராமமூர்த்தி, எஸ்.ஐ.க்கள் செல்வராஜ், சவுந்தரராஜ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

Tags

Next Story
AI மரங்களை நடவு செய்வதில் புரட்சி: சரியான இடத்தை எப்படி கண்டுபிடிப்பது?