குமாரபாளையம் நகராட்சி சார்பில் பகுதி சபா கூட்டம்

குமாரபாளையம் நகராட்சி சார்பில் நடைபெற்ற பகுதி சபா கூட்டம்.
குமாரபாளையம் நகராட்சி சார்பில் பகுதி சபா கூட்டம் சேர்மன் விஜய்கண்ணன் தலைமையில் நடைபெற்றது. இதில் 31வது வார்டு பொதுமக்கள் சாலை வசதி, குடிநீர் வசதி, வடிகால் வசதி, தெரு நாய்கள் தொல்லை, மின் விளக்குகள் உள்ளிட்ட அடிப்படை தேவைகள் குறித்து கோரிக்கை விடுத்தனர். அங்கன்வாடி பணியாளர்கள் ரத்த சோகை சம்பந்தமான விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
பொதுமக்கள் கோரிக்கைகள் விரைவில் நிறைவேற்றப்படும் என சேர்மன் கூறினார். இதில் பொறியாளர் ராஜேந்திரன், வார்டு கமிட்டி செயலர் ஜான் ராஜா, சபா செயலர் பாலமாதப்பா, சபா உறுப்பினர்கள் ராதா, பாஸ்கரன், தனசேகரன், கிருஷ்ணன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். இதே போல் 2,11,21 ஆகிய வார்டுகளிலும் பகுதி சபா கூட்டம் நடைபெற்றது. இன்று 10 வார்டுகளில் நடைபெறவுள்ளது.
நகராட்சி நிர்வாக இயக்குனர் ஆய்வு
குமாரபாளையம் நகராட்சி பகுதிகளில் நகராட்சி நிர்வாக இயக்குனர் பொன்னையா ஆய்வு செய்தார். அறிவு சார் மையம், தினசரி காய்கறி மார்க்கெட் கட்டுமான பணி, கோம்பு பள்ளம் சீரமைப்பு பணி, பழைய பள்ளிபாளையம் சாலையில் உயர்மட்ட பாலம் கட்டுமான பணி ஆகியவற்றை ஆய்வு செய்து ஆலோசனை வழங்கினார். வாரச்சந்தை சீரமைப்பு பணி, பேருந்து நிலைய சீரமைப்பு பணி, தூய்மை பணியாளர்கள் புதிய குடியிருப்பு கட்டுதல், பாதாள சாக்கடை திட்டம், 33 வார்டுகளில் வடிகால் மற்றும் தார்சாலை வசதி ஆகியவற்றிற்கான கோரிக்கை மனுவினை நகராட்சி சேர்மன் விஜய்கண்ணன், நகராட்சி நிர்வாக இயக்குனரிடம் வழங்கினார். இந்த ஆய்வில் நகராட்சி கமிஷனர் (பொ) ராஜேந்திரன், கவுன்சிலர்கள், தி.மு.க. நிர்வாகிகள் உள்பட பலர் பங்கேற்றனர்.
40 கிலோ கேரி பேக் பறிமுதல்
குமாரபாளையம் நகராட்சி நிர்வாகம் மற்றும் மாவட்ட மாசுக்கட்டுபாட்டு வாரியம் சார்பில் நகரில் உள்ள ஜவுளிக்கடை, டீக்கடை, மளிகை கடை, பேன்சி பொருட்கள் கடை, ஓட்டல் கடை உள்ளிட்ட பல்வேறு வியாபார நிறுவனங்களில் ஆய்வு செய்தனர். இதில் கேரி பேக் 40 கிலோ பறிமுதல் செய்ததுடன் 6 ஆயிரத்து 100 ரூபாய் அபாரதம் விதித்தனர். இதில் நகராட்சி சுகாதார அலுவலர் ராமமூர்த்தி, எஸ்.ஐ. செல்வராஜ், மாவட்ட மாசுக்கட்டுப்பாட்டு அலுவலர் மணிவண்ணன், உதவி பொறியாளர் கிருஷ்ணன் உள்பட பலர் பங்கேற்றனர்.
ஸ்மார்ட் வகுப்பு நடத்த ஆசிரியர்களுக்கு பயிற்சி
தமிழக முதல்வர் அறிவுறுத்தல்படி, நகராட்சி பள்ளிகளின் தரம் உயர்த்தி டிஜிடல் முறையில் கற்பிக்கும் முறையை மேம்படுத்த குமாரபாளையம் சின்னப்பநாயக்கன்பாளையம்,மேற்கு காலனி, நாராயண நகர், புத்தர் தெரு ஆகிய நகராட்சி மற்றும் அரசு உயர்நிலைப்பள்ளிகளில் நகராட்சி சேர்மன் விஜய்கண்ணன் முயற்சியினால் ஸ்மார்ட் வகுப்பு கொண்டுவரப்படவுள்ளது. ஸ்மார்ட் வகுப்பு நடத்தும் முறை குறித்து ஆசிரியர்களுக்கான பயிற்சி முகாம் விஜய்கண்ணன் தலைமையில் நடைபெற்றது. கவுன்சிலர் வேல்முருகன், நிர்வாகிகள் செல்வராஜ், ஞானசேகரன், ஹரி பாலாஜி உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.
அம்மா உணவகத்தில் ஆய்வு செய்த சேர்மன்
குமாரபாளையம் அம்மா உணவகத்தில் நகராட்சி சேர்மன் விஜய்கண்ணன் ஆய்வு செய்தார். பொதுமக்களிடம் உணவு குறித்து கேட்டறிந்தார். பணியாளர்களிடம் அம்மா உணவகத்திற்கு தேவையான உதவிகள் குறித்து கேட்டறிந்தார். ஏழை மக்கள் உணவருந்த வரும் நிலையில், அவர்களுக்கு அன்புடன் உணவு பரிமாற அறிவுறுத்தினார்.
குமாரபாளையம் அம்மா உணவகத்தில் நீராவி கொதிகலன் செயல்பாட்டினை சேர்மன் ஆய்வு செய்தார்.
ஸ்டாலின் தலைமையிலான தி.மு.க. ஆட்சி பொறுப்பேற்றதும், கடந்த ஆட்சியில் செயல்பட்டு வந்த அம்மா உணவகம் தொடர்ந்து செயல்படவேண்டுமென்ற அறிவுறுத்தலின்படி, குமாரபாளையம் அம்மா உணவகத்தில் காலை மற்றும் மதிய வேளையில் மலிவு விலையில் உணவு வழங்கப்பட்டு வருகிறது. இங்கு பழுதடைந்த நீராவி கொதிக்கலன் மற்றும் வெட் கிரைண்டர் புதிதாக பொருத்தும் பணி மற்றும் சமையல்கூட பராமரிப்பு பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த பணிகளை நகராட்சி சேர்மன் விஜய்கண்ணன் நேரில் ஆய்வு செய்தார்.
குமாரபாளையம் நகராட்சி பகுதியில் ஓ.ஏ.பி.க்கு விண்ணப்பிக்கும் நபர்கள் ஓ.ஏ.பி. பெற தகுதி உள்ளவர்தானா? என சமூக பாதுகாப்பு திட்ட தாசில்தார் ஜானகி தீவிர விசாரணை செய்து, உரிய நபர்களுக்கு கிடைக்க நடவடிக்கை எடுத்து வருகிறார். இதன்படி நகராட்சி சேர்மனிடம் முதியோர் பலர் ஓ.ஏ.பி. விண்ணப்பங்கள் கொடுத்து உதவி கேட்டு வருகின்றனர். இவர்களின் விண்ணப்பங்கள் சரி பார்க்கப்பட்டு பரிசீலித்து ஓ.ஏ.பி. ஆணை தாசில்தாரால் வழங்கபடுகிறது. இந்த ஆணைகளை 15வது வார்டு பொதுமக்களுக்கு வழங்கும் நிகழ்வு நகராட்சி அலுவலகத்தில் நடைபெற்றது. சேர்மன் விஜய்கண்ணன் பங்கேற்று தகுதியான முதியோர்களுக்கு ஓ.ஏ.பி. ஆணைகளை வழங்கினார்.
குமாரபாளையம் நகராட்சி சார்பில் குப்பையில்லா நகராட்சி விழிப்புணர்வு தூய்மை பணி நகராட்சி சேர்மன் விஜய்கண்ணன் தலைமையில் கம்பன் நகரில் நடைபெற்றது. இதில் பொதுமக்களிடம் மக்கும், குப்பை, மக்காத குப்பை தரம் பிரித்து வழங்குதல், சுற்றுப்புற பகுதியை தூய்மையாக வைத்திருத்தல், உள்ளிட்ட கருத்துக்கள் எடுத்துரைக்கப்பட்டன. தூய்மையாக வைத்திருப்போம் என பொதுமக்கள் உறுதிமொழி எடுத்துக்கொண்டனர். வீடு, வீடாக துண்டு பிரசுரங்கள் விநியோகம் செய்யப்பட்டன.
குமாரபாளையம் சின்னப்பநாயக்கன்பாளையம் அரசு உயர்நிலைப்பள்ளியில் தானியங்கி நாப்கின் இயந்திரம் பொருத்தப்பட்டுள்ளது. இதன் பயன்பாட்டினை நகராட்சி சேர்மன் விஜய்கண்ணன் ஆய்வு செய்தார். 5 ரூபாய் நாணயம் போட்டால் நாப்கின் வரும் வகையில் இந்த இயந்திரம் வடிவமைக்கப்பட்டுள்ளது. பயன்படுத்தப்பட்ட நாப்கின்களை எரியூட்டும் இயந்திரமும் பொருத்தப்பட்டுள்ளது. மாணவியர்களுக்கு ஆசிரியைகள் இதனை பயன்படுத்தும் முறை குறித்து கற்றுக்கொடுத்தனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu