குமாரபாளையத்தில் கொரோனா தடுப்பூசி குலுக்கல் முடிவுகள் அறிவிப்பு

குமாரபாளையத்தில் நகராட்சி அலுவலகத்தில் நடைபெற்ற தடுப்பூசி பரிசுகளுக்கான குலுக்கல்.
தமிழகத்தில் அனைவரும் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் என மாநில அரசு, மாவட்ட கலெக்டர் வலியுறுத்தி வருகிறார்கள். இதன்படி அக். 23ல் நடைபெற்ற முகாமில் தடுப்பூசி போட்டுக்கொள்பவர்களுக்கு தங்க நாணயம், வெள்ளி நாணயம், உள்ளிட்ட பல பரிசுகள் குலுக்கல் முறையில் வழங்கப்படும் என குமாரபாளையம் நகராட்சி நிர்வாகம் மற்றும் நகர தி.மு.க. சார்பில் அறிவிக்கப்பட்டது.
இந்த அறிவிப்பு வெளியானதால் பொதுமக்கள் மிகுந்த ஆர்வத்துடன் சென்று அனைத்து முகாம்களிலும் தடுப்பூசி போட்டுக்கொண்டனர். நகராட்சி அலுவலகத்தில் கமிஷனர் ஸ்டான்லிபாபு தலைமையில் பரிசு குலுக்கல் நடைபெற்றது. நகர தி.மு.க. பொறுப்பாளர் செல்வம் குலுக்கலை தொடங்கி வைத்தார்.
இதில் 8வது வார்டை சேர்ந்த சீனிவாசன், 10வது வார்டை சேர்ந்த பாப்பாத்தி, 3 வது வார்டை சேர்ந்த யுவராஜ் ஆகியோர் தங்க நாணயம் பெற தேர்வாகினர். 18வது வார்டை சேர்ந்த நந்தினி, 3 வது வார்டை சேர்ந்த சண்முகம் ஆகிய இருவரும் வெள்ளி நாணயம் பெற தேர்வாகினர்.
மேலும் 50 நபர்கள் எவர்சில்வர் பாத்திரங்கள் பெற தேர்வாகினர். இந்த பரிசுகளை அக். 27ம் நடைபெறவுள்ள நிகழ்ச்சியில் வழங்கப்படவுள்ளது.
இந்நிகழ்ச்சியில் பொறியாளர் ராஜேந்திரன், சுகாதார அலுவலர் ராமமூர்த்தி, எஸ்.ஐ.-க்கள் செல்வராஜ், சவுந்தரராஜன், உள்பட தி.மு.க. நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu