குமாரபாளையம் காளியம்மன் கோவில் தீ மிதி திருவிழா
நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் காளியம்மன் கோவில் தீ மிதி திருவிழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தீ மிதித்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.
நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தில் அருள்மிகு ஸ்ரீ காளியம்மன் கோவில் உள்ளது. ஆண்டுதோறும் மாசி மாதத்தில் பூச்சாட்டுதலுடன் கோவில் பண்டிகை தொடங்கி வெகு விமர்சையாக நடைபெறுவது வழக்கம். இதன் தொடர்ச்சியாக இந்த ஆண்டிற்கான பண்டிகையை கொண்டாட மாவட்ட நிர்வாகம் கொரோனா கட்டுப்பாட்டு விதிமுறைகளுடன் அனுமதி வழங்கியது. தொடர்ந்து இந்தாண்டிற்கான திருவிழா கடந்த 17ம் தேதி பூச்சாட்டுதலுடன் தொடங்கியது. இதையடுத்து கடந்த 24 ம் தேதி கொடியேற்ற நிகழ்ச்சி நடைபெற்றது.இதன் பின்னர் விழாவின் 15ம் நாளான இன்று முக்கிய நிகழ்வான பக்தர்கள் பூகுண்டம் இறங்கும் விழா நடைபெற்றது.
இதில் கடந்த 15 நாட்களாக கடுமையான விரதம் இருந்த ஆண்,பெண் பக்தர்கள் உட்பட ஆயிரக்கணக்கானோர் காவிரியில் புனித நீராடி சக்தி அழைப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். கோவிலின் தலைமை பூசாரி சதாசிவம் தலையில் பூக்கரகத்துடன் காளியம்மன் கோவில் முன்பு அமைக்கப்பட்டிருந்த 21 அடி நீளம் கொண்ட தீ மேடையில் தீ மிதித்து தீ மிதி விழாவை துவக்கி வைத்தார். இதனைத் தொடர்ந்து ஆண்களும் பெண்களும் தீ மிதித்து தங்களது நேர்த்திக் கடனை செலுத்தினர். சிலர் தங்கள் குழந்தைகளுடன் தீ மிதித்து நேர்த்திக்கடன் செலுத்தினர். பின்னர் பொங்கல் விழா நடைபெற்றது.
Tags
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu