சோழவந்தான் வட்டாரத்தில் மழையால் வெற்றிலை பயிர்கள் சேதம்

சோழவந்தான் வட்டாரத்தில் மழையால் வெற்றிலை பயிர்கள் சேதம்

சேதமடைந்த வெற்றிலை பயிர்கள்.

சோழவந்தான் அருகே, முள்ளிபள்ளம் கிராமத்தில் கனமழை காரணமாக 30 ஏக்கர் கொடிக்கால் விவசாயம் பாதிக்கப்பட்டுள்ளது.

மதுரை மாவட்டம், சோழவந்தான் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று மாலை முதல் இரவு வரை கன மழை பெய்தது. இதன் காரணமாக நெல், வாழை, தென்னை, கொடிக்கால் போன்ற விவசாய பகுதிகள் பலத்த சேதம் அடைந்துள்ளன.

சோழவந்தான் அருகே, முள்ளிபள்ளம் கிராமத்தில் தென்கரைக் கண்மாய் பாசனக் பகுதிகளில் கொடிக்கால் விவசாயம் செய்திருந்த விவசாயிகளுக்கு ஏக்கருக்கு 6 லட்சம் வரை செலவு செய்திருந்த நிலையில், நேற்று மாலை பெய்த கன மழை காரணமாக கொடிக்கால் வாழை உள்ளிட்ட விவசாய நில பகுதிகளில் முழங்கால் அளவு தண்ணீர் தேங்கி விவசாயம் பெரிய அளவில் சேதமடைந்துள்ளது.

முள்ளி பள்ளம் கிராமத்தைச் சேர்ந்த விவசாய சங்கத் தலைவர் மார்நாட்டான் என்பவரது கொடிக்காலில் நேற்று இரவு பெய்த கனமழை காரணமாக கொடிக்கால் பகுதி முழுவதும் தண்ணீர் தேங்கி இரவு முழுவதும் தண்ணீர் வடிந்த நிலையில் தற்போது வரை தண்ணீர் கொடிக்காலில் இருந்து வெளியேறிக் கொண்டிருக்கிறது. இதனால், கொடிக்கால் முழுவதும் அழுகும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது

இதுகுறித்து விவசாயி மார்நாட்டான் கூறுகையில், ஒரு ஏக்கர் கொடிக்கால் விவசாயம் செய்ய ரூபாய் 6 லட்சம் வரை செலவு செய்திருந்த நிலையில், திடீரென பெய்த கன மழையால் நிலங்களில் தண்ணீர் தேங்கியுள்ளது. இதனை வெளியேற்ற வழி இல்லாததால் தண்ணீர் வடியும் வரை காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. மழை தொடரும் பட்சத்தில் மீண்டும் மீண்டும் தண்ணீர் தேங்கி எனது கொடிக்கால் உள்பட இந்த பகுதியில் உள்ள சுமார் 30 ஏக்கருக்கும் மேற்பட்ட விவசாயம் பாதிக்கக்கூடிய வாய்ப்புகள் உள்ளது.

கொடிக்கால் விதைகளை இதற்காக திருப்புவனம் சென்று வாங்கி வந்து விவசாயம் செய்து வருகிறோம். கடந்த காலங்களில் இந்த பகுதியில் 300 ஏக்கருக்கு மேல் விவசாயம் செய்து வந்த நிலையில் விவசாயிகளின் வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டு இருந்த சூழ்நிலையில், விவசாயம் சுருங்கி தற்போது 30 ஏக்கருக்கும் குறைவான அளவில கொடிக்கால்விவசாயம் செய்து வருகின்றனர். அதுவும் இதுபோன்ற பருவநிலை காலங்களில் மழை மற்றும் வெயில் காரணமாக கொடிக்கால் விவசாயம் கடுமையாக பாதிக்கப்படுவதுடன், ஏக்கருக்கு 6 லட்சம் வரை எங்களுக்கு நஷ்டம் ஏற்படுகிறது.

இதேபோல், கடந்த காலங்களிலும், ஏற்பட்ட நஷ்டங்களை வேளாண் துறை அதிகாரிகளோ வருவாய் துறை அதிகாரிகளோ முறையாக கணக்கீடு செய்து உரிய இழப்பீடு வழங்காத நிலையில், மேலும் மேலும் வட்டிக்கு பணம் வாங்கி விவசாயம் செய்ய வேண்டிய நிலைக்கு நாங்கள் தள்ளப்பட்டுள்ளோம். ஆகையால், இந்த ஆண்டாவது பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு, அவர்களின் விவசாய பகுதிகளை நேரில் ஆய்வு செய்து உரிய இழப்பீடு வழங்கி விவசாயிகளின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க வேண்டும் என அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளார்.

Tags

Next Story