மதுரை அருகே ரூ.10 ஆயிரம் லஞ்சம் வாங்கிய சர்வே உதவி ஆய்வாளர் கைது

லஞ்சம் வாங்கியதாக கைது செய்யப்பட்ட பிரேம்குமார்.
மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் தாலுகாவில் பட்டா வழங்க பத்தாயிரம் ரூபாய் லஞ்சம் கேட்ட சர்வே உதவி ஆய்வாளர் கைது செய்யப்பட்டார்.
மதுரை மாடக்குளம் பகுதியைச் சேர்ந்தவர் கிருஷ்ணன்.இவர் ,தனியார் நிறுவனத்தில் விற்பனை அதிகாரியாக பணிபுரிந்து வருகிறார். இவரது மனைவி சரண்யாவுக்கு அவரது தாயார் தானமாக வழங்கிய நிலத்திற்கு பட்டா கேட்டு திருப்பரங்குன்றம் தாலுகா அலுவலகத்தில் விண்ணப்பித்துள்ளார்.
3 மாதங்களாக நடவடிக்கை இல்லாததால், சர்வே உதவி ஆய்வாளர் பிரேம்குமாரை அணுகியபோது, ரூ.14 ஆயிரம் லஞ்சம் கேட்டுள்ளார். அவ்வளவு பணம் தரமுடியாது என கிருஷ்ணன் கூறவே பின்னர், நடந்த பேச்சுவார்த்தையை தொடர்ந்து ரூ.10 ஆயிரமாவது கொடு அப்ப தான் பட்டா வழங்குவதற்கு நடவடிக்கை எடுப்பேன் இல்லை என்றால் எதுவும் செய்ய முடியாது என கறார் ஆக கூறி உள்ளார்.
லஞ்சம் கொடுக்க விரும்பாத கிருஷ்ணன் இதுகுறித்து மதுரை மண்டல லஞ்சஒழிப்புத்துறை டி.எஸ்.பி., சத்தியசீலனிடம் புகார் செய்துள்ளார்.இதனை தொடர்ந்து சர்வே உதவி ஆய்வாளர் பிரேம்குமார் மீது லஞ்ச ஒழிப்பு எப்ஐஆர் பதிவு செய்தனர். பின்னர் லஞ்ச ஒழிப்பு போலீசார் வழங்கிய அறிவுரைபடி , தாலுகா அலுவலகத்திற்கு கிருஷ்ணன் சென்றார். அப்போது பிரேம்குமார் அங்கு இல்லை.
இதனை தொடர்ந்து அலைபேசியில் கிருஷ்ணன் தொடர்பு கொண்டபோது அழகப்பன் நகர் பகுதியில் கள ஆய்விற்கு சென்றுள்ளதால் அங்கு வந்து பணத்தை தருமாறு கூறி உள்ளார் பிரேம்குமார். இதனை தொடர்ந்து கிருஷ்ணன் அங்கு சென்றார். கூடவே லஞ்ச ஒழிப்பு போலீசார் சென்று மறைந்து இருந்தனர். கிருஷ்ணன் அங்கு சென்றதும் சாலையோர மரத்தின்கீழ் லஞ்சம் வாங்கிய பிரேம்குமாரை, இன்ஸ்பெக்டர் குமரகுரு தலைமையிலான போலீசார் கையும் களவுமாக பிடித்து கைது செய்துள்ளனர்.
பின்னர் அவரது வீடு மற்றும் தொடர்புடைய இடங்களிலும் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்தினர். இதனை தொடர்ந்து பிரேம்குமாரை போலீசார் கோர்ட்டில் ஆஜர்படுத்தி நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைத்தனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu