கட்சி உறுப்பினர்களை சேர்ப்பது இப்ப எங்களுக்கு முக்கியம்: தமிழிசை..!

கட்சி உறுப்பினர்களை சேர்ப்பது இப்ப எங்களுக்கு முக்கியம்: தமிழிசை..!
X

தமிழிசை சௌந்தரராஜன் 

கூட்டணி பற்றி இப்போது நாம் கவலைப்பட ஒன்றும் இல்லை. இப்போது நாம் கட்சிக்கு புதிய உறுப்பினர்களை சேர்ப்பது முக்கியம் என்று தமிழிசை சௌந்தரராஜன் பேட்டியளித்தார்.

மதுரை:

சீன பொருட்களுக்கு தடை விதிப்பதன் மூலம் நமது சிவகாசி தீப்பெட்டி தொழில் முன்னேற்றம் அடையும். எது வேண்டுமானாலும் நடக்கலாம், எப்படி வேண்டுமானாலும் நடக்கலாம். இப்போதைக்கு எங்கள் வேலை கட்சியை பலப்படுத்துவதற்காக உறுப்பினர் சேர்ப்பது தான் கூட்டணி குறித்து தலைவர்கள் பேசிக் கொள்வார்கள் - தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்தார்.

மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில், சுவாமி தரிசனம் செய்வதற்காக முன்னாள் புதுச்சேரி ஆளுநர் தமிழிசை சௌந்தர்ராஜன் சென்னையில் இருந்து விமான மூலம் மதுரை வந்தடைந்தார். தொடர்ந்து, மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்து அவர் கூறியதாவது:

மழையிலிருந்து மக்களை பாதுகாப்பது ஒரு புறம் என்றாலும், குளங்களை தூர்வாரி குடிநீரை சேமித்திருக்க வேண்டும். பெரியார் அணையில் குழாய்கள் உடைந்துள்ளதால், குடிநீர் வீணாகி விட்டது. குடிதண்ணீர் இல்லாமல் குடியிருப்புகளுக்குள் நீர் புகுந்து விட்டதால், பிரச்சனை அதிகமாகி விட்டது. திமுக அரசு சென்னை, மதுரை, திருச்சி என அனைத்து மாவட்டங்களையும் மழைக்கு தயார் செய்வதில் முற்றிலும் தோல்வி. உதயநிதி வார் ரூமில் அமர்ந்து விட்டதால், மழைக்கான ஏற்பாடுகளை செய்து விட்டது போன்ற தோற்றத்தை உருவாக்குகிறார்கள்.

விடியா அரசு இன்று விளம்பர அரசாக மாறிவிட்டது. மிகப்பெரிய வானியல் சாகசத்தை கூட மக்கள் மகிழ்ச்சியுடன் பார்க்க கூடிய ஏற்பாடுகளை செய்ய முடியாத அரசு எதற்கெடுத்தாலும் விளம்பரம் தான். அன்னை மீனாட்சி நம்மை காப்பாற்றுவாள். ஆனால்,இந்த திமுக ஆட்சியை நம்மை காப்பாற்றுமா என்றுதான் கவலையாக உள்ளது. திமுக ஆட்சியில் பருப்பு கூட வேகாது போல உள்ளது தீபாவளிக்கு ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு கிடைக்காது என அச்சுறுத்தல் மக்களிடம் இருக்கிறது.

காஷ்மீரில் குடியரசுத் தலைவர் ஆட்சி முடிவுக்கு வந்தது குறித்த கேள்விக்கு:

இது மிகப்பெரிய வெற்றி. அரியானாவில் உள்ள வாக்கு சதவீதத்தை திமுகவும் காங்கிரசும் ஆராய்கின்றனர். ஆனால்,வெற்றி பெற்ற கூட்டணியை விட காஷ்மீரில் பாஜக 25 சதவீதம் பெற்றுள்ளது. காங்கிரஸ் கட்சி ஏழு சதவீதத்திற்கு சுருங்கி விட்டது. காங்கிரசுக்கு எதிர்காலமே இல்லை. ராகுல் காந்தி மிகப்பெரிய தலைவராக உருவெடுத்து விட்டார் என்று சொன்னார்கள் ஆனால், செயற்கைத் தலைவர்களை உருவாக்க முடியாது மோடி போன்ற இயற்கையான தலைவர்கள் தான் நாட்டு மக்கள் எதிர்பார்ப்பார்கள்.

மத்திய அரசின் திட்டங்களை மக்கள் ஏற்றுக் கொள்கிறார்கள் திமுக ஏற்றுக்கொள்ளவில்லை என்பதுதான் நமது கருத்து. மூன்று ஆண்டுகளுக்கு முன்பு கதிர் சக்தி திட்டம் கொண்டு வந்த போது அதை நான் முழுவதும் வரவேற்றேன். தேசத்தை சின்ன சின்ன விஷயங்களில் கூட பிரதமர் முன்னெடுத்து செல்வதற்கு இது மிகப்பெரிய உதாரணம்.

ரயில் விபத்து மத்திய அரசின் சதியா என்ற குற்றச்சாட்டு குறித்த கேள்விக்கு:

ராகுல் காந்தியை வன்மையாக கண்டிக்கிறேன். வான்சாகத்தின் போது ஐந்து பேர் உயிரிழந்தபோது அவர் எங்கே சென்று இருந்தார். கள்ளக்குறிச்சியில் 65 பேர் உயிரிழந்த போது ராகுல் எங்கே சென்று இருந்தார்.வான் சாகசத்தில் உயிரிழந்த சம்பவம் போல பாஜக ஆளுகின்ற மாநிலத்தில் நடந்திருந்தால் ஸ்டாலின்தான் முதலில் குரல் கொடுத்திருப்பார். அவரைப் போல் தான் ராகுல் காந்தியும் தமிழகத்தில் நடக்கிற அசம்பாவிதத்திற்கு குரல் கொடுக்க மாட்டார்.

அதனால் தான் காஷ்மீரில் மக்கள் காங்கிரசுக்கு சரியான பதிலடி கொடுத்திருக்கிறார்கள். ரயில் விபத்துகளை வைத்து அரசியல் செய்ய வேண்டாம். ஆனால் வான் சாகசத்தில் உயிர் இழந்ததை அரசியலாக்கக் கூடாது என்று சொல்கிறார்கள். ஆனால்,திமுக எதை எடுத்தாலும் அரசியலாக்கும். திமுகவின் கூட்டணி கட்சிகளே அதற்கு எதிராக திரும்பி இருக்கிறது.

2026 நிச்சயமாக இதே திமுக கூட்டணி நிலைக்காது. சாம்சங் விவகாரத்தை வைத்து கம்யூனிஸ்ட் வேறு எங்கோ செல்கிறார்கள், மதுவிலக்கு பிரச்சனையை வைத்து விசிக ஒரு புறம் செல்கிறார்கள், தங்களுக்கும் ஆட்சியில் பங்கு எடுக்க வேண்டும் என்று தம்பி கார்த்திக் சிதம்பரம் இப்போதுதான் கொஞ்சம் தைரியம் வந்து பேசி இருக்கிறார். 2026 தேர்தலுக்கு திமுக கூட்டணிக்கு ஆட்சியில் பங்கு கொடுக்கவில்லை என்றால் திமுக கூட்டணி வெள வெளுத்து போகும்.

ரயில் விபத்தை தடுக்க புதிய கண்டுபிடிப்பு குறித்த கேள்விக்கு:

புதிய கண்டுபிடிப்புகளால் தான் இவ்வளவு பெரிய விபத்திலும் உயிரிழப்பு ஏற்படவில்லை. நிச்சயமாக புதிய கண்டுபிடிப்புகளை பயன்படுத்தியிருக்கிறார்கள் என்பதற்கு ஆதாரம் உள்ளது.

நேத்து மீண்டும் கள்ளச்சாராய பிரச்சனை நடந்தது குறித்த கேள்விக்கு:

எதுவுமே இல்லை என்பார்கள் ஆனால் இருக்கும். அதேபோல கள்ளச்சாராயம் இல்லை என்பார்கள், ஆனால் ஆறாக ஓடிக் கொண்டுதான் இருக்கும்.

அதிமுக பாஜக கூட்டணி குறித்து திண்டுக்கல் சீனிவாசன் பேசியது குறித்த கேள்விக்கு:

தேர்தல் வரும்போது எது வேண்டுமானாலும், எப்படி வேண்டுமானாலும், எங்கு வேண்டுமானாலும், எதைப்பற்றி வேண்டுமானாலும் நடக்கலாம். இப்போதைக்கு எங்கள் வேலை எங்கள் கட்சியை பலப்படுத்துவதற்கு உறுப்பினர்களை சேர்ப்பதுதான். கூட்டணி குறித்து எங்கள் அகில பாரத தலைவர்கள் முடிவு செய்வார்கள்.

சீன தயாரிப்புகளுக்கு தடை குறித்த கேள்விக்கு:

நிர்மலா சீதாராமனுக்கும், பியூஸ் கோயலுக்கும் தமிழகத்தை சேர்ந்தவர் என்கிற முறையில் நன்றி சொல்கிறேன். மதுரை, விருதுநகர் போன்ற மாவட்டங்களில் தீப்பெட்டி தொழில் வாழ்வாதாரமாக உள்ளது. மத்திய அரசின் திட்டங்கள் ஹிந்தியில் உள்ளதை தமிழ் படுத்தினால் மக்களுக்கு புரியும், நான் புதுச்சேரியில் திட்டங்களை தமிழ்படுத்தினோம். ஆனால் இங்கு உள்ள அரசு அது தெரியாமல் இருப்பது தான் நல்லது என நினைக்கிறார்கள். ஆனால் நாங்கள் மத்திய அரசு திட்டங்களை மக்களுக்கு புரியும் வகையில் தமிழ் படுத்தும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறோம்.

தவெக தலைவர் பாதை மாறுகிறாரா என்ற கேள்விக்கு:

அரசியல் கட்சித் தலைவர் தவறை உணர்ந்து அதை திருத்திக் கொள்வது ஆரோக்கியமான சூழ்நிலைதான். ஆனால் தற்போது உள்ள சூழலில் இந்து மதம் சார்ந்த கருத்துக்களை யார் எதிர்த்தாலும் அவர்களை மக்கள் எதிர்பார்கள், இந்து மதம் சார்ந்த மக்களுக்கு ஆதரவு தரவில்லை என்றால் மக்கள் அவர்களுக்கு ஆதரவு தர மறுப்பார்கள் என்கிறது தான் இன்றைய சூழ்நிலை. அதைத்

தம்பி விஜய் உணர்ந்துவிட்டார் என்று நினைக்கிறேன். அவரிடம் இருந்து தீபாவளி வாழ்த்தையும் எதிர்பார்க்கிறோம். அவர் மட்டுமல்ல முதல்வரிடமிருந்தும் தீபாவளி வாழ்த்து எதிர்பார்க்கிறோம். திமுக தலைவராக இல்லை என்றாலும் தமிழக முதல்வராக தீபாவளி வாழ்த்து தெரிவிக்க வேண்டும். வாழ்த்து சொல்லவில்லை என்றால், தீபாவளி கொண்டாடுபவர்கள் அவரை எதிர்ப்பார்கள் என்பது எனது கருத்து என தமிழிசை சௌந்தரராஜன் கூறினார்.

Tags

Next Story