/* */

திருப்பரங்குன்றம் முருகன் கோயிலில் பங்குனி திருவிழா

திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் பங்குனி திருவிழாவில் அன்ன வாகனத்தில் முருகன் தெய்வானை எழுந்தருளினர்

HIGHLIGHTS

திருப்பரங்குன்றம் முருகன் கோயிலில் பங்குனி திருவிழா
X

பங்குனித் திருவிழாவை  முன்னிட்டு திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி அம்பாள் எழுந்தருளினர்

திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் பங்குனி மூன்றாவது நாள் திருவிழாவில் அன்ன வாகனத்தில் முருகன் தெய்வானை எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார்

மதுரை திருப்பரங்குன்றம் கோயிலில், கொண்டாடப்படும் விழாக்களில் மிகவும் பிரசித்தி பெற்றது பங்குனிப் பெருவிழா ஆண்டுதோறும் 15 நாட்கள் கொண்டாடப்படும் இத்திருவிழா மார்ச் 26-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

தொடர்ந்து தினந்தோறும் சுப்பிரமணிய சுவாமி தெய்வானையுடன் சந்நிதி தெரு ,பெரிய ரதவீதி உள்ளிட்ட நான்கு வீதிகளிலும் தினந்தோறும் தங்க குதிரை வாகனம், தங்கமயில் வாகனம் உள்ளிட்ட வாகனங்களில் திருவீதி உலா வருவது வழக்கம்.பங்குனித் திருவிழாவின் மூன்றாவது நாளாக அன்ன வாகனத்தில் முருகன் தெய்வானை எழுந்தருளி வீதி உலா சென்று பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதனை பக்தர்கள் தரிசனம் செய்தனர்.

அறுபடை வீடுகளில் முதலாவது படை வீடாகத் திகழ்வது திருப்பரங்குன்றம்:

முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் முதலாவது படை வீடாகத் திகழ்வது திருப்பரங்குன்றம் ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில். முருகப் பெருமான் தெய்வயானையை திருமணம் செய்து கொண்ட தலம்.அறுபடை வீட்டு முருகப் பெருமான் கோயில்களில் இக்கோயில் அளவில் பெரியதாகும். லிங்க வடிவில் இருக்கும் இம்மலையைப் பற்றி சைவ சமயக் குரவர்களில் சுந்தரமூர்த்தி நாயனார், திருஞானசம்பந்தப் பெருமான் ஆகியோர் இவ்வூருக்கு வந்து ஆலய வழிபாடு செய்து பதிகங்கள் பல பாடியுள்ளனர் என்று அறியப்படுகிறது.

சங்ககாலப் புலவரான நக்கீரர் இத்தலத்து முருகப் பெருமானை வழிபட்டு தனது குறை நீக்கிக் கொண்ட திருத்தலம். இத்திருத்தலத்திற்கு இலக்கியங்களில் தண்பரங்குன்று, தென்பரங்குன்று, பரங்குன்று, பரங்கிரி, திருப்பரங்கிரி பரமசினம், சத்தியகிரி, கந்தமாதனம், கந்த மலை என பல்வேறு பெயர்கள் வழங்கப்படுகின்றன.

தமிழ்நாட்டில் சிறப்புற்று விளங்குவது மதுரை மாநகர். இம்மாமதுரை நகரிலிருந்து தென்மேற்கில் தேசிய நெடுஞ்சாலை வழியே 9 கி.மீ. தொலைவில் அமைந்திருப்பது திருப்பரங்குன்றம் என்னும் திவ்வியத் தலமாகும். ரயில் வழியாகவும் இவ்வூரை அடையலாம். மதுரையிலிருந்து இத்திருத்தலத்திற்கு ஏராளமான நகரப் பேருந்துகள் செல்கின்றன. பேருந்து நிறுத்தம் கோயிலுக்கு அருகிலேயே உள்ளது. திரு + பரம் + குன்றம். பரம் என்றால் பரம் பொருளான சிவபெருமான். குன்றம் என்றால் குன்று (மலை). திரு என்பது அதன் சிறப்பை உணர்த்தும் அடைமொழியாகத் திருப்பரங்குன்றம் என ஆயிற்று.

திருப்பரங்குன்றம் லிங்க வடிவமாகக் காட்சியளிக்கும் அருட் செறிந்த மலை. இந்தத் திருப்பரங்குன்றத்தில் தங்கி சிவசக்தியை நோக்கி ஆறுமுகப் பெருமான் தவமிருந்தார்.இக்குன்றமானது சிவலிங்க வடிவிலேயே காணப்படுவதால் சிவபெருமானே குன்றின் உருவில் காட்சியளிப்பதாக எல்லோராலும் வணங்கப்பட்டு வருகிறது. இம்மலையின் உயரம் சுமார் 190 மீட்டராகும். இம்மலையை நித்தம் வலம் வந்து வழிபட்டால் தொழுவாரின் வினைகளெல்லாம் தீர்ந்துவிடும் என்று திருஞான சம்பந்தர் தான் இயற்றிய தேவாரத்தில் பாடியுள்ளார்.

குரு பக்தியின்றி ஞானம் பெற முடியாது. கயிலாயத்தில் பார்வதி தேவிக்கு, சிவபெருமான் பிரணவ மந்திரத்தின் உட்பொருளை உபதேசிக்கும்போது, தன் தாயாரின் மடிமீது முருகப்பெருமான் அமர்ந்திருந்தார். தாய்க்கு தந்தையார், பிரணவ மந்திர உபதேசம் செய்தபோது முருகப்பெருமானும் அவ்வுபதேசத்தைக் கேட்டார்.புனிதமான மந்திரப் பொருளை குருவின் மூலமாகவே அறிந்து கொள்ள வேண்டும். மறைமுகமாக அறிந்து கொள்ளுதல் முறைமையாகாது.

எனவே முருகப்பெருமானே பிரணவ மந்திரத்தினை, அதன் உட்பொருளை பிரம்மதேவனுக்கு உபதேசித்த போதிலும், சிவபெருமானும், முருகப்பெருமானும் ஒருவரேயானாலும், உலக நியதிக்கு ஒட்டாத, சாஸ்திரங்கள் ஒப்பாத ஒரு காரியமாக அமைந்துவிட்டபடியால், இக்குற்றத்திற்குப் பரிகாரம் தேடி முருகப் பெருமான் திருப்பரங்குன்றத்திற்கு வந்து தவம் செய்தார்.

கடைசியில், சிவபெருமானும், பார்வதி தேவியாரும் தோன்றி, முருகப் பெருமானுக்கு அங்குக் காட்சி தந்து அருளினார்கள். அவர்கள் இங்கு பரங்கிநாதர் என்றும், ஆவுடை நாயகி என்றும் பெயர் பெற்றார்கள்.அவர்களுடைய ஆலயம் இன்றும் திருப்பரங்குன்றத்தில் மீனாட்சி சுந்தரேஸ்வரர் ஆலயம் என்னும் பெயரில் வழங்கி வருகிறது. எனவே திருப்பரங்குன்றம் செல்லும் பக்தர்கள் முதலில் சிவன்-பார்வதியை தரிசனம் செய்த பிறகே முருகன் ஆலயத்திற்குச் செல்ல வேண்டுமென்பது ஐதீகம்.

முருகப்பெருமானுக்கு சிவபெருமான் தை மாதத்தில் பூச நட்சத்திரத்தன்று காட்சித் தந்தார். எனவே தைப்பூசத்தன்று சிவபெருமானையும், முருகக் கடவுளையும் வழிபடுகின்றவர்கள் இஷ்ட சித்திகளைப் பெறுவார்கள் என்று கூறப்படுகிறது. எனவே திருப்பரங்குன்றத்தில் தைப்பூச விழா பத்து நாட்கள் நடைபெறும். அதே போல பங்குனி உத்திர திருவிழாவும் விமரிசையாக கொண்டாடப்படுகிறது.


Updated On: 1 April 2023 9:15 AM GMT

Related News

Latest News

  1. நாமக்கல்
    பரமத்தி மலர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் பிளஸ் 2 தேர்வில்
  2. கல்வி
    பணம் சம்பாதிக்கணும் இல்லையா..? எந்த படிப்பை தேர்வு செய்யலாம்..?
  3. இராஜபாளையம்
    ராஜபாளையத்தில் அதிமுக சார்பில் நீர் மோர் பந்தல் திறப்பு
  4. லைஃப்ஸ்டைல்
    அப்பா இல்லாத ஏக்கம்: கவிதைகள் மற்றும் மேற்கோள்கள்
  5. வீடியோ
    மத்தியில் கூட்டாட்சி ! மாநிலத்தில் தன்னாட்சி Seeman!#seeman #ntk...
  6. கோவை மாநகர்
    சவுக்கு சங்கரை காவலில் எடுத்து விசாரிக்க போலீசார் மனுத்தாக்கல்
  7. கோவை மாநகர்
    குடிநீர் பிரச்சினையை தீர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும்: எஸ். பி....
  8. கல்வி
    மதிப்பெண் மட்டுமே தகுதி அல்ல..! பெற்றோரே கவனியுங்கள்..!
  9. ஈரோடு
    பிளஸ் 2 தேர்வு: ஈரோடு மாவட்டத்தில் 97 பள்ளிகள் நூறு சதவீத தேர்ச்சி
  10. வீடியோ
    😎உருவாகிறது ஆட்டோகாரன் New Version ! 🔥தெறிக்கப்போகும் Opening Song🔥...