துரை வைகோ முறைப்படி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்: வைகோ கருத்து

துரை வைகோ முறைப்படி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்: வைகோ கருத்து

மதுரை விமான நிலையத்தில்  செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த மதிமுக பொதுச்செயலர் வைகோ.

தனிப்பட்ட முறையில் துரைவைகோ அரசியலுக்கு வருவது எனக்கு விருப்பமில்லை.

மதிமுகவில் துரை வைகோ முறைப்படி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார் என்றார் மதிமுக பொதுச்செயலர் வைகோ.

மதுரை விமானநிலையத்தில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் மேலும் கூறியதாவது: பொதுச்செயலாளர் என்ற முறையில் நேரடியாகவே நியமனம் செய்யலாம். ஆனால், முறைப்படி தேர்தல் நடத்தி தேர்ந்தெடுக்கப்பட வேண்டும் . எந்தக் கட்சியிலும் இல்லாதது மதிமுகவில் தான் நடைபெற்றது. வாக்கெடுப்பு ஓட்டு பெட்டி வைத்து 106 பேர் கலந்து கொண்டதில், 104 பேர் வாக்களித்தனர்.

கட்சித் தொண்டர்களின் பல்வேறு நிகழ்வுகளில், துரை வைகோ பங்கேற்றுள்ளார். அவற்றை மாவட்ட செயலாளர்கள் வரவேற்று அவருக்கு உரிய பதவி அளிக்க வேண்டும் என கூறியதால் தான், இந்த முடிவு எடுக்கப்பட்டது. தனிப்பட்ட முறையில் துரைவைகோ அரசியலுக்கு வருவது எனக்கு விருப்பமில்லை. ஆனாலும், துரை வைகோவுக்கு அரசியலுக்கு வருவதற்கு கட்சியினர் வரவேற்பு அளித்துள்ளனர். சில நாளிதழ்களில் விமர்சனங்கள் செய்கின்றன. விமர்சனங்கள் அரசியலில் வருவது சகஜம். ஆனால், தனிப்பட்ட முறையில் என்னை விமர்சனம் செய்து வருகின்றனர்.

சில பேர் கட்சியை விட்டு செல்வதால் கட்சி பிளவுபடும் என்பதல்ல தொடர்ந்து கட்சி வலுவாகதான் உள்ளது. வாக்கெடுப்பில் கலந்து கொள்ள முடியாத சிலர் வாட்ஸ்அப் மூலமாகவும் தொலைபேசி மூலமாகவும் துரை வைகோவுக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். உத்தரப்பிரதேச விமான நிலையத்திற்கு ராஜபக்சே வருவதை நாங்கள் எதிர்க்கிறோம். தற்போதுள்ள சூழ்நிலையில் எங்களால் நேரடியாக செல்ல முடியவில்லை இல்லையேல் கடந்த முறை சாஞ்சியில் நடைபெற்றது போல் 1500 பேருடன் சென்று எதிர்ப்பு தெரிவிப்போம். வரும் 1-ஆம் தேதி லண்டனுக்கு செல்லும் கோத்தபயராஜபக்சேவை எதிர்ப்பு தெரிவித்து, அங்குள்ள தமிழர்களுக்கு கடிதம் அனுப்பியுள்ளோம். அதிமுக அரசின் முன்னாள் அமைச்சர்கள் மீது தொடர்ந்து சோதனை நடைபெறுவது குறித்த கேள்விக்கு, தவறு செய்தவர்கள் தண்டிக்கப்பட வேண்டும் என்றார் வைகோ.


Tags

Next Story