பணி நேரத்தில் செல்போன் பயன்படுத்த அரசு ஊழியர்களை அனுமதிக்கக் கூடாது: நீதிமன்றம்

பணி நேரத்தில் செல்போன் பயன்படுத்த அரசு ஊழியர்களை அனுமதிக்கக் கூடாது: நீதிமன்றம்
X

பைல் படம்

அலுவலக நேரத்தில் அரசு ஊழியர்கள் தேவையின்றி செல்போன் பயன்படுத்துவதும், வீடியோ எடுப்பதும் நல்ல நடவடிக்கை அல்ல.

பணி நேரத்தில் செல்போன் பயன்படுத்த அரசு ஊழியர்களை அனுமதிக்கக் கூடாது என்றும், அதற்கான விதிகளை தமிழ்நாடு அரசு உருவாக்க வேண்டும் என்றும் உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

தமிழ்நாட்டில் பல அரசு அலுவலகங்களில் அரசு ஊழியர்கள் பணிநேரங்களின்போது தேவையில்லாமல் செல்போன் பயன்படுத்துவது, அதனால் வைரலாகும் வீடியோக்கள் என அவ்வப்போது சில சம்பவங்கள் ஆங்காங்கே பரவலாக நடந்த வண்ணம் உள்ளது.

இதுபோன்ற சம்பவம் திருச்சியில் சில நாட்களுக்கு முன்னர் நடைபெற்றது. திருச்சி மக்கள் நல்வாழ்வுத்துறையின் மண்டல அலுவலகத்தில் பணிபுரியும் ராதிகா என்பவர், பணி நேரத்தின்போது உடன் பணி புரியும் ஊழியரை வீடியோ எடுத்தது தொடர்பாக, பணியிடை நீக்கம் செய்யப்பட்டிருந்தார். இதையடுத்து தன்மீதான பணியிடை நீக்க உத்தரவை நீக்குமாறு நீதிமன்றத்தில் ராதிகா மனு அளித்திருந்தார்.

செல்போன் பயன்படுத்த தடை: இந்த நிலையில் மதுரை உயர் நீதிமன்ற கிளையில், ராதிகா மனு விசாரணைக்கு வந்தது. அப்போது இந்த வழக்கை விசாரித்த நீதிபதி எஸ். எம். சுப்பிரமணியம், அலுவலக நேரத்தில் அரசு ஊழியர்கள் தேவையின்றி செல்போன் பயன்படுத்துவதும், வீடியோ எடுப்பதும் நல்ல நடவடிக்கை அல்ல. அரசு ஊழியர்களின் இதுபோன்ற செயல்பாடுகளை தமிழ்நாடு அரசு அனுமதிக்கக்கூடாது. ஒருவேளை ஏதேனும் அவசரமெனில் முறையான அனுமதி பெற்று செல்போனை பயன்படுத்த வேண்டும் என கருத்து தெரிவித்து, தமிழக அரசுக்கு சில உத்தரவுகளைப் பிறப்பித்தார்.

அதாவது, அரசு ஊழியர்கள் பணிநேரத்தில் செல்போன் பயன்படுத்துவது, அலுவலக நேரத்தில் எடுக்கப்படும் வீடியோவால் வன்முறைகள் ஏற்படும் பட்சத்தில், அது தொடர்பாக அரசு ஊழியர் விதிப்படி நடவடிக்கை எடுக்கும் விதமாக, தமிழ்நாடு அரசு விதிகளை வகுத்து சுற்றறிக்கை அனுப்ப வேண்டும். தமிழ்நாடு மக்கள்நல்வாழ்வுத்துறை செயலர் இந்த உத்தரவின் நகல் கிடைக்கப்பெற்ற 4 வாரங்களுக்குள்ளாக இந்த உத்தரவை நடைமுறைப் படுத்தவேண்டும் என நீதிமன்ற உத்தரவில் கூறப்பட்டுள்ளது.

Tags

Next Story
அங்காளம்மன் கோவிலில் பக்தி நிறைந்த பெண்கள் பால்குட ஊர்வலத்தின் கோலாகலம்..!