மதுரை அருகே ஆளுநர் சென்ற கான்வாய் முன் தீக்குளித்த நபரால் பரபரப்பு

மதுரை அருகே ஆளுநர் சென்ற கான்வாய் முன் தீக்குளித்த நபரால் பரபரப்பு

மணிப்பூர் அருகே ஆளுநர் கான்வாய் முன் தீக்குளித்த நபரால் பரபரப்பு ஏற்பட்டது.

மதுரை அருகே மணிப்பூர் மாநில ஆளுநர் சென்ற கான்வாய் முன் தீக்குளித்த நபரால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

மதுரையில் ஆளுநர் இல.கணேசன் கான்வாய் செல்லும் வழியில் உடலில் தின்னர் ஊற்றி தீக்குளித்த நபரால் பரபரப்பு ஏற்பட்டது. காவல்துறையினர் விசாரணையில் கடன் தொல்லை காரணமாக அவர் தீக்குளித்ததாக தகவல் வெளியாகி உள்ளது.

மதுரை மாநகர் மடீட்சியா ஹாலில் இன்று நடைபெறும் புத்தக வெளியீட்டு நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக மணிப்பூர் மாநில ஆளுநர் இல.கணேசன் இன்று மதுரைக்கு வருகை தந்தார்.

இந்நிலையில், மதுரை விமான நிலையத்திலிருந்து மதுரை மாநகர் அழகர்கோவில் சாலையில் உள்ள அரசினர் தங்கு விடுதியில் ஓய்வெடுக்க செல்வதற்காக ஆளுநர் வாகனம் கான்வாய் அணிவகுப்புடன் சென்று கொண்டிருந்தது. கவர்னரின் கான்வாய் செல்லும் வழிநெடுகிலும் ஏராளமான காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர்.

இந்நிலையில் ஆளுநர் இல.கணேசனின் கான்வாய் செல்லும் பகுதியான கே.கே. நகர் வக்பு வாரிய கல்லூரி எதிரில் 48 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவர் உடலில் திடீரென தின்னரை ஊற்றி தீயை பற்ற வைத்தபடி சாலையில் ஓடிவந்த நிலையில் தீக்குளித்தார்.


இதனால், உடலில் தீப்பற்றிய நிலையில் அங்கும் இங்கும் கதறியபடி ஓடிய நிலையில் மயங்கி கீழே விழுந்தார். இதனையடுத்து, அந்த பகுதியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த காவல் துறையினர் அவரை மீட்டு அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பிவைத்தனர்.

48 வயது மதிக்கத்தக்க அந்த நபர் உடல் முழுவதும் எரிந்த நிலையில் உயிருக்கு ஆபத்தான நிலையில் உள்ளதாக மருத்துவமனை தரப்பில் தெரிவிக் கப்பட்டுள்ளது.

போலீசார் நடத்திய விசாரணையில் தீக்குளித்த நபர் மதுரை பாசிங்காபுரம் பகுதியை சேர்ந்த கண்ணன் என தெரியவந்துள்ளது. இதனையடுத்து, இச்சம்பவம் தொடர்பாக அண்ணாநகர் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திவருகின்றனர். மதுரையில் ஆளுநரின் வாகனம் செல்லும் வழியில் தீக்குளித்த நபரால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Tags

Next Story