கே.ஆர்.பி அணைக்கு நீர்வரத்து குறைந்தது..!

கே.ஆர்.பி அணைக்கு நீர்வரத்து குறைந்தது..!

கேஆர்பி அணை -கோப்பு படம் 

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தொடர்ந்து மழை பெய்யாததால் கிருஷ்ணகிரி கே.ஆர்.பி., அணைக்கு நீர்வரத்து சரிந்து வருகிறது.


கிருஷ்ணகிரி மாவட்டத்தில், கடந்த மாத இறுதியில் மாவட்டம் முழுவதும் நல்ல மழை பெய்தது. அதனால் ஆறு, குளம், குட்டை மற்றும் அணைகள் போன்ற நீர்நிலைகள் வேகமாக நிரம்பின. அப்போது பெய்த மழைக்குப் பின்னர் கிருஷ்ணகிரியில் மழை பெய்யவில்லை.

அதனால் அணைகளுக்கு நீர்வரத்து குறைந்து போனது. கே.ஆர்.பி., அணைக்கு கடந்த, 10ம் தேதி வினாடிக்கு, 443 கன அடியாக நீர்வரத்து இருந்தது. தற்போது மழையில்லாமல் இருப்பதால் நீர்வரத்து நேற்று, 9 கன அடியாக சரிந்தது. இடது மற்றும் வலதுபுற வாய்க்கால் மூலம் பாசனத்திற்கு, 185 கன அடிநீர் திறக்கப்பட்டுள்ளது.

அணையின் மொத்த உயரம் 52 அடி. நேற்றைய நிலவரப்படி நீர்மட்டம் 49 அடியாக இருந்தது. இதேபோல், பாரூர் ஏரியின் மொத்த கொள்ளளவான, 15.60 அடியில் நேற்று, 15.20 அடியாக நீர்மட்டம் இருந்தது. ஏரிக்கு, 13 கன அடி நீர் வந்து கொண்டிருந்தது. ஏரியில் இருந்து, 43 கன அடி நீர், வாய்க்காலில் திறக்கப்பட்டிருந்தது.

ஊத்தங்கரை பாம்பாறு அணைக்கு நீர்வரத்து முற்றிலும் நின்றுபோய்விட்டது. அணையின் மொத்த உயரமான, 19.60 அடியில் நேற்று, 14.07 அடியாக நீர்மட்டம் இருந்தது. சூளகிரி சின்னாறு அணைக்கு நீர்வரத்தின்றி, அணை வறண்டு போயுள்ளது. .

Tags

Next Story