கிருஷ்ணகிரி தோட்டக்கலை சார்பில் வாகனம் மூலம் காய்கறி, பழங்கள் விற்பனை
கிருஷ்ணகிரி மாவட்ட தோட்டக்கலைத்துறை சார்பில் கிருஷ்ணகிரி, காவேரிப்பட்டணத்தில் வாகனம் மூலம் காய்கறி, பழங்கள் விற்பனை
HIGHLIGHTS
தமிழகம் முழுவதும் நேற்று முதல் தளர்வுகள் இல்லா முழு ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டுள்ளது. இதனால் பொதுமக்களுக்கு தேவையான காய்கறிகள், பழங்கள் கிடைக்கும் வகையில் நடமாடும் வாகனம் மூலம் குடியிருப்பு பகுதிகளுக்கு நேரடியாக சென்று குறைந்த விலையில் விற்பனை செய்யப்படுகிறது.
அதன்படி கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தோட்டக்கலைத்துறை சார்பில் வாகனம் மூலம் காய்கறி, பழங்கள் விற்பனையை தொடக்க நிகழ்ச்சி காவேரிப்பட்டணத்தில் நடந்தது. விற்பனையை, மாவட்ட தோட்டக்கலைத்துறை இணை இயக்குநர் உமாராணி தொடங்கி வைத்தார். உதவி இயக்குநர் அகிலா முன்னிலை வகித்தார்.
வாகனம் மூலம் காய்கறிகள், பழங்களை விற்பனை தொடங்கி வைத்த இணை இயக்குநர் கூறியதாவது: கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தோட்டக்கலைத்துறை மூலம் அந்தந்த வட்டார கூட்டு பண்ணை மூலம் 31 இடங்களில் கிராமங்கள் தோறும் சென்று காய்கறி, பழங்கள் விற்பனை செய்யப்படுகிறது. பொதுமக்கள் கூட்டமாக சென்று பொருட்களை வாங்க கூடாது. முககவசம் அணிந்தும் சமூக இடைவெளியுடன் பொருட்கள் வாங்கி கொள்ளலாம். இந்த வாகனத்தின் மூலம் வழங்கப்படும் பொருட்கள் குறைந்த விலையிலும், தரமாக விற்பனை செய்யப்படுகிறது என்றார்.