குட்டை நீரில் மூழ்கி 3 சிறுவர்கள் உயிரிழப்பு
பள்ளி விடுமுறையில் ஆடு மேய்க்கச் சென்ற மூன்று சிறுவர்கள் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது.
HIGHLIGHTS
கரூர் மாவட்டம் வீரணாம்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் காசிராஜன் விவசாயி. இவரது மகன் நவீன் குமார். அதே பகுதியை சேர்ந்த ஆறுமுகம் விவசாயி மகன்கள் வசந்த் மற்றும் மயில் முருகன். 3 சிறுவர்களும் வீரணாம்பட்டியில் உள்ள அரசு பள்ளியில் படித்து வருகின்றனர்.
பள்ளி விடுமுறை என்பதால் சிறுவர்கள் மூன்று பேரும் தினசரி ஆடு மேய்க்கச் செல்வது வழக்கம். இதே போல இன்று இவர்கள் 3 பேரும் புனவாசிபட்டியில் உள்ள நான்கு ரோடு அருகே உள்ள தனியார் நிலத்தில் ஆடு மேய்த்துக் கொண்டு இருந்தனர். அப்போது அவர்கள் மேய்த்த ஆடு அங்குள்ள தனியார் நிலத்தில் உள்ள குட்டையில் தவறி விழுந்தது. அந்த ஆட்டை மீட்கச் சென்ற சிறுவர்கள் மூவரும் ஒருவர் பின் ஒருவராக குட்டை நீரில் மூழ்கி உயிரிழந்தனர்.
அருகில், இருந்தவர்கள் சிறுவர்கள் உடலை மீட்டனர். இதையடுத்து லாலாபேட்டை காவல் நிலைய போலீசார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக குளித்தலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். பள்ளி விடுமுறையில் ஆடு மேய்க்கச் சென்ற சகோதரர்கள் உட்பட மூன்று சிறுவர்கள் குட்டையில் மூழ்கி மூழ்கி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.