கரூரில் தொற்றால் உயிரிழந்த பெண்ணின் உடலை பெற உறவினர்கள் சாலைமறியல்
கரூர் அரசு மருத்துவமனையில் கொரோனா தொற்றால் உறிரிழந்த பெண்ணின் உடலை மருத்துவர்கள், தர மறுத்ததால் உறவினர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
HIGHLIGHTS
கரூரில் கொரோனா சிகிச்சை பலனின்றி உயிரிழந்த பெண்ணின் உடலை தராமல் அலைக்கழித்ததைக் கண்டித்து உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். போலீசார் சமாதானப்படுத்தி சாலை மறியலை கைவிட வைத்தனர்.
கரூர் திருமாநிலையூர் பகுதியைச் சேர்ந்தவர் கீதா 47 வயதான இவர் கொரோனா தொற்று பாதிப்பால் நேற்று கரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டார். சிகிச்சை பலனின்றி நேற்று இரவே இவர் உயிரிழந்தார்.
இதையடுத்து அவரது உறவினர்கள் உடலை பெற இன்று காலை மருத்துவமனை சென்றபோது நேற்று இரவு பணியில் இருந்த டாக்டர் கையொப்பமிட்டால்தான் உடலை ஒப்படைக்க முடியும் என மருத்துவமனை ஊழியர்கள் கீதாவின் உறவினர்களை அங்குமிங்கும் அழைக்கழித்துள்ளனர்.
பல டாக்டர்களை சந்தித்து முறையிட்டும் உடலை ஒப்படைக்கப்படாததைக் கண்டித்து கீதாவின் உறவினர்கள் மருத்துவக் கல்லூரி முன்பு சாலை மறியலில் ஈடுபட்டனர்.தகவல் அறிந்து வந்த போலீசார் அவர்களை சமாதானப்படுத்தி மறியலை கைவிட வைத்தனர்.