ஆன்லைன் ஒலிம்பிக் வினாடி வினா போட்டி மக்கள் பங்கேற்க கரூர் கலெக்டர் அழைப்பு
டோக்கியோவினை நோக்கி சாலை எனும் தலைப்பில் ஆன்லைன் ஒலிம்பிக் வினாடி வினா போட்டியில் மக்கள் கலந்து கொள்ள கரூர் கலெக்டர் அழைப்பு விடுத்துள்ளார்.
HIGHLIGHTS
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியுள்ளதாவது:
ஜப்பான் நாட்டில் உள்ள டோக்கியோ நகரில் ஜூலை 23 முதல் ஆகஸ்ட் 8 வரை ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள் நடைபெற உள்ளது. இதில், மேசைப்பந்து விளையாட்டில் சத்யன் மற்றும் சரத் கமல் ஆகியோரும், வாள்சண்டையில் .பவானிதேவியும், பாய்மர படகோட்டுதலில் கணபதி, வருண் தக்கர் மற்றும் நேத்ரா குமணன் ஆகிய தமிழ்நாட்டைச் சேர்ந்த விளையாட்டு வீரர்கள் ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்க உள்ளனர்.
தமிழக வீரர்களை உற்சாகப்படுத்தும் வகையில், கரூர் மாவட்ட விளையாட்டரங்கத்தின் முன் ஜூலை 22 ம் தேதி வரையில் ஒலிம்பிக் செல்ஃபி பாயிண்ட் ( Olympic Selfie Point ) ஏற்படுத்தி வீரர், வீராங்கனைகள் மற்றும் பொது மக்களுக்கு ஒலிம்பிக் போட்டி நடைபெறுவது குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டுள்ளது.
ROAD TO TOKYO 2020 எனும் தலைப்பில் அனைத்து வயதினரும் ஆன்லைன் ஒலிம்பிக் வினாடி வினா போட்டியில் https://itindia.gov.in/ என்னும் இணையதளத்தில் ROAD TO TOKYO 2020 Quiz என்னும் இணைப்பில் கலந்துகொள்ளலாம். இந்த இணைப்பில் 120 வினாடிகளுக்குள் பதிலளிக்கும் வகையில் ஒலிம்பிக் போட்டிகள் குறித்த 10 கேள்விகள் கேட்கப்படும் . ஒரு நபர் ஆன்லைன் மூலம் ஒலிம்பிக் வினாடி வினா போட்டியில் ஒரே ஒரு முறை மட்டுமே பங்கேற்க இயலும்.போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு இந்திய அணியின் டி - ஷர்ட் மற்றும் பங்கேற்பு சான்றிதழ் பரிசாக வழங்கப்படும்.
இவ்வாறு கரூர் மாவட்ட கலெக்டர் செய்திக்குறிப்பில் கூறியுள்ளார்.