கரூரில் கொரோனா பரவல் தடுக்க வீடுகளுக்கே காய்கறி : ஒரு 'சபாஷ்' திட்டம்
கொரோனா பரவலை தடுக்கும் விதமாக கரூர் நகராட்சி வீடு வீடாக காய்கறி விற்பனை செய்ய ஏற்பாடு செய்துள்ளது.
HIGHLIGHTS
கொரோனா வைரஸ் பரவலை தடுப்பதற்காக கரூர் நகராட்சி நேரடியாக வீடுகளுக்கு காய்கறி செய்யும் திட்டத்தை தொடங்கியுள்ளது.
கொரோனா வைரஸ் பரவலை தடுப்பதற்காக கரூர் மாவட்டம் முழுவதும் பல்வேறு இடங்களில் சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டு வாகனங்கள் தணிக்கை செய்யப்படுகிறது. தேவையற்ற வகையில் கரூர் நகருக்குள் செல்வது கட்டுப்படுத்தப்படுகிறது.
காவல்துறையினர் 24 மணி நேரமும் தீவிர வாகன தணிக்கையில் ஈடுபட்டு மருத்துவம் உள்ளிட்ட அத்தியாவசிய பணிகளுக்கு மட்டும் அனுமதிக்கின்றனர். தேவையற்ற வகையில் ஊர் சுற்றும் நபர்கள் மீது வழக்கு பதிந்து வாகனங்களை பறிமுதல் செய்கின்றனர்.
காய்கறி, மளிகை கடைகள். காலை 6 மணி முதல் 10 மணி வரை இயங்குவதால் கரூரில் உள்ள காமராஜர் மார்க்கெட் மற்றும் உழவர் சந்தை ஆகிய இடங்களில் காய்கறி வாங்குவதற்காக பொதுமக்கள் அதிக அளவில் தினசரி வந்து செல்கின்றனர்.
இதன் மூலம் தொற்று பரவும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டது. இதையடுத்து காமராஜர் மார்க்கெட் மற்றும் உழவர் சந்தை ஆகியவை தற்காலிகமாக மூடப்பட்டன. இங்கு காலை 4 மணி முதல் 6 மணி வரை மொத்த வியாபாரம் செய்ய மட்டும் அனுமதிக்கப்பட்டது.
அதன் பிறகு கரூர் நகராட்சி ஏற்பாடு செய்த 48 வாகனங்கள் மூலம் நகராட்சியில் உள்ள 48 வார்டுகளிலும் பொது மக்களுக்கு நேரடியாக காய்கறி விற்பனை செய்யும் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் பொதுமக்கள் அதிக அளவில் வெளியே வருவது தவிர்க்கப்பட்டுள்ளது.
இந்த திட்டம் அடுத்த அரசு உத்தரவு வரும் வரை தொடர்ந்து 48 வார்டுகளிலும் வாகனம் மூலம் காய்கறிகள் பொதுமக்கள் வீடுகளுக்கே சென்று விற்பனை செய்யப்படும் என கரூர் நகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.