வாங்கல் அருகே மதுபோதையில் பீர் பாட்டில் தாக்குதல்: ஒருவர் கைது

வாங்கல் அருகே மதுபோதையில் பீர் பாட்டில் தாக்குதல்: ஒருவர் கைது
பைல் படம்.
வாங்கல் அருகே மது அருந்தும்போது ஏற்பட்ட வாய்த்தகராறில் லாரி டிரைவரை கத்தி, பீர் பாட்டிலால் தாக்கிய இருவரில் ஒருவரை போலீசார் கைது செய்தனர்.

கரூர் மாவட்டம், நெரூர் அருகே அரங்கநாதன்பேட்டையை சேர்ந்தவர் சரண்ராஜ்(32) லாரி டிரைவர். இவர் தனது உறவினர் ராஜா மற்றும் நெரூர் வடபாகத்தை சேர்ந்த பாலசுப்பிரமணி, பாபு ஆகியோருடன் சேர்ந்து காட்டு பிள்ளையார் கோயில் அருகே மது அருந்திக் கொண்டிருந்தார்.

அப்போது சரண்ராஜ் மற்றும் பாலசுப்ரமணிக்கு இடையே வாய்த்தகராறு ஏற்பட்டது. அங்கிருந்தவர்கள் அவர்களை சமாதானப்படுத்தி வீட்டிற்கு அனுப்பி வைத்தனர். சரண்ராஜ், ராஜா ஆகியோர் சின்னக்காளிபாளையம் நான்கு ரோடு அருகே சென்றபோது, அவர்களை பாலசுப்ரமணி மற்றும் பாபு ஆகியோர் வழிமறித்தனர்.

பின்னர் பாபு பீர் பாட்டிலாலும், பாலசுப்பிரமணி பட்டன் கத்தியாலும் சரண்ராஜை தாக்கினர். இதில் படுகாயமடைந்த அவர் மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.

இது குறித்து வாங்கல் போலீசார் வழக்குப்பதிவு செய்து பாபுவை கைது செய்ததுடன் தலைமறைவான பாலசுப்பிரமணியை தேடி வருகின்றனர்.

Tags

Next Story