கொரோனா விதிமீறல் - தனியார் மருத்துவமனைக்கு இரண்டு லட்சம் அபராதம்.
கொரோனா தொற்று பரவல் தடுப்பு விதிமுறைகள் மற்றும் கட்டுப்பாடுகளை பின்பற்றாமல் செயல்பட்ட தனியார் மருத்துவமனைக்கு அபராதம்.
HIGHLIGHTS
கன்னியாகுமரி மாவட்டத்தில் கொரோனா தொற்று பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் தினந்தோறும் நூற்றுக்கணக்கானோர் கொரோனா பாதிப்புக்கு உள்ளாகி அரசு மருத்துவமனைகள் மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.
இந்நிலையில், நாகர்கோவில் மாநகராட்சி அலுவலகம் அருகில் செயல்படும் பிரபல தனியார் மருத்துவமனை கொரோனா சிகிச்சை அளித்து வரும் நிலையில் கொரோனா தொற்று பரவல் தடுப்பு விதிமுறைகள் மற்றும் கட்டுப்பாடுகளை பின்பற்றாமல் மேலும் நோய் தொற்று பரவும் வகையில் செயல்படுவதாக மாநகராட்சிக்கு புகார்கள் வந்தது.
அதன் அடிப்படையில் மாநகராட்சி நகர்நல அலுவலர் கின்சால் தலைமையிலான அதிகாரிகள் சம்மந்தப்பட்ட தனியார் மருத்துவமனைக்கு நேரடியாக சென்று ஆய்வு மேற்கொண்டதில் தனியார் மருத்துவமனை கட்டுப்பாடுகளை மீறி செயல்பட்டது உறுதி செய்யப்பட்டது.
இதனை தொடர்ந்து அந்த தனியார் மருத்துவமனை நிர்வாகத்திற்கு மாநகராட்சி அதிகாரிகள் இரண்டு லட்ச ரூபாய் அபராதம் விதித்தனர், மேலும் விதிமுறைகள் மற்றும் கட்டுப்பாடுகளை மீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்தனர்.