டாக்டர் வீட்டில் 42 பவுன் நகை கொள்ளை: வேலைகாரப்பெண், டிரைவர் கைது
குமரியில் டாக்டர் வீட்டில் 42 பவுன் நகை கொள்ளை போன சம்பவத்தில் வீட்டின் வேலைகாரப் பெண் மற்றும், டிரைவர் கைது செய்யப்பட்டனர்.
HIGHLIGHTS
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் பார்வதிபுரம் சானல்கரையை சேர்ந்தவர் ஆபிரகாம்ஜோயல் ஜேம்ஸ். இவர் நாகர்கோவில் பால்பண்ணை அருகில் மருத்துவமனை நடத்தி வருகிறார். இவரது வீட்டில் லாக்கரில் வைக்கப்பட்டு இருந்த 42 பவுன் தங்கம் மற்றும் வைர நகைகள் மற்றும் பணம், கடந்த செப்டம்பர் மாதம் 23 ம்தேதி கொள்ளை அடிக்கப்பட்டது. இது தொடர்பாக, பினிதா ஆபிரகாம் கொடுத்த புகாரின் அடிப்படையில், வடசேரி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டவர்களை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டது.
இந்நிலையில், டாக்டர் வீட்டில் சமையல் வேலை பார்த்த பெருவிளை அம்மன் கோயில் தெருவை சேர்ந்த ராஜேந்திரன் என்பவரின் மனைவி ஜெயசுபா (37) மற்றும் டிரைவராக வேலைபார்த்த பாலவிளை, சர்ச் ரோடு பகுதியை சேர்ந்த டேவிட் என்பவரின் மகன் இர்வின் (35) ஆகியோரை கண்காணித்து தனிப்படை போலீசார் அவர்கள்தான் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் என்பதை உறுதி செய்து, அவர்களை கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்து 42 சவரன் தங்க நகை 1 வைர நெக்லஸ் மற்றும் வைர கம்மல் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.