சிபாரிசு கேட்டு வராதீர்கள்: குமரியில் கவுன்சிலர்களுக்கு மேயர் 'செக்'
நாகர்கோவில் மாநகராட்சியில் மேயர், துணை மேயர் மற்றும் கவுன்சிலர்கள் பொறுப்பேற்ற பின்னர் மாநகராட்சியின் முதல் கூட்டம் இன்று நடைபெற்றது.
நாகர்கோவில் மாநகராட்சியில் மேயர், துணை மேயர் மற்றும் கவுன்சிலர்கள் பொறுப்பேற்ற பின்னர் மாநகராட்சியின் முதல் கூட்டம் இன்று மாநகராட்சி அலுவலகத்தில் நடந்தது. மேயர் மகேஷ் தலைமையில் ஆணையர் ஆஷா அஜித் முன்னிலையில் நடைபெற்ற கூட்டத்தில் 52 வார்டுகளை சேர்ந்த கவுன்சிலர்களும் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் பங்கேற்ற கவுன்சிலர்கள் குடிநீர் பிரச்சினை, தெருவிளக்கு பிரச்சினை குறித்து பேசினர், மேலும் பழைய வீடுகளுக்கு கூடுதல் வரி விதிப்பது கண்டிக்கத்தக்கது என கூறிய கவுன்சிலர்கள் வறுமைகோடு பட்டியலை புதிதாக தயாரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தனர்.
இதற்கு பதில் அளித்து மேயர் மகேஷ் கூறும் போது மாநகராட்சி முதல் மேயராக பொறுப்பேற்றுள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது. எனக்கு வாய்ப்பளித்த தமிழக முதல்வருக்கு நன்றி தெரிவித்து கொள்கிறேன். நான் வேண்டியவர், வேண்டாதவர் என்று பார்க்காமல் மக்கள் பணி ஆற்றுவேன். கடந்த 26 ஆண்டுகால அரசியல் வாழ்க்கையில் தற்போது மக்கள் சேவை செய்ய எனக்கு வாய்ப்பு கிடைத்துள்ளது என்றார். தி.மு.க., அ.தி.மு.க., பாரதிய ஜனதா காங்கிரஸ் கட்சி என்று பார்க்காமல் எல்லாரையும் என் குடும்பமாக நினைத்து உங்களது கோரிக்கைகளை நிறைவேற்றி தருவேன் என்றார். மேலும் கவுன்சிலர்கள் மட்டுமின்றி பொதுமக்களும் எப்போது வேண்டுமானாலும் என்னை அணுகலாம் என தெரிவித்தார்.
நல்ல விஷயத்திற்காக செய்யப்படும் முயற்சிகளுக்கு அனைவரும் ஒத்துழைப்பு தரவேண்டும், மாநகராட்சிக்கு எதிராக நடைபெறும் விஷயங்களுக்கு கவுன்சிலர்கள் சிபாரிசுக்கு வரக்கூடாது. கவுன்சிலர்கள் கொண்டு வரும் புகார்கள் தொடர்பாக அதிகாரிகள் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும், நாகர்கோவில் மாநகரில் உள்ள 52 வார்டுகளில் உள்ள மக்களையும் உங்களுடன் சென்று நேரில் சந்திப்பேன், என தெரிவித்தார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu