குமரி- ஆக்சிஜன் இல்லாததால் உயிரிழப்பு - உடலை வாங்க உறவினர்கள் மறுப்பு.
கன்னியாகுமரியில் ஆக்சிஜன் இல்லாததால் இளம்பெண் உயிரிழப்பு - உடலை வாங்க உறவினர்கள் மறுத்து போரட்டம் நடத்தி வருகின்றனர்
HIGHLIGHTS
கன்னியாகுமரி மாவட்டம் இரவிபுதூர்கடை அருகே குன்னம்பாறை பகுதியை சேர்ந்தவர் ரேவதி. 30 வயதான இவருக்கு காய்ச்சல் ஏற்பட்டதை தொடர்ந்து கடந்த 20ம் தேதி அருகிலுள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு சென்றார்.
அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்து வந்த போது கொரோணா பரிசோதனை மேற்கொண்ட பின் ஆக்சிஜன் குறைவாக காணப்பட்டதால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
அங்கு அவர் சிகிச்சை பெற்று வந்த நிலையில், திடீரென உயிரிழந்தார். அவரது உயிரிழப்பு கொரோனா நோயால் அல்ல எனவும் மருத்துவர்களின் அலட்சியம் தான் காரணம் எனக் கூறி உடலை வாங்க மறுத்த உறவினர்கள் இது குறித்து ஆசாரிப்பள்ளம் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.
இது குறித்து ரேவதியின் உறவினர்கள் கூறுகையில், ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் ரேவதிக்கு மேற்கொண்ட கொரோணா பரிசோதனையின் முடிவில் தொற்று பாதிப்பில்லை என கண்டறியப்பட்டது.
ஆனால் ஆக்சிஜன் குறைவு காரணமாக ஆக்சிஜன் செலுத்தப்பட்டு சிகிச்சையளித்து வந்த நிலையில், திடீரென ஆக்சிஜன் கருவி செயல் இழந்ததாகவும் இது குறித்து அங்கிருந்த ஊழியர்களிடம் தெரிவித்தபோது அதனை அவர்கள் கண்டு கொள்ளவில்லை.
நீண்ட நேரமாக ஆக்சிஜன் தொடர்பான பிரச்னை காணப்பட்டதால் ரேவதிக்கு மூச்சு திணறல் ஏற்பட்டு உயிருக்கு போராடிக் கொண்டிருந்த போதிலும் மருத்துவர்கள் வரவில்லை மேலும் மாற்று ஆக்சிஜன் கருவி பொறுத்தவும் அவசர பிரிவுக்கு மாற்றவும் தங்களுக்கு அதிகாரம் இல்லை என ஊழியர்கள் கூறியதாக தெரிவித்தனர்.
எனவே, ரேவதியின் உயிரிழப்புக்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்கும் வரை ரேவதியின் உடலை பெற்று கொள்ள மாட்டோம் என தெரிவித்தனர்.