ஒன்றரை பவுன் நகைக்காக 4 வயது சிறுவன் கொலை - இளம் பெண் கைது
கன்னியாகுமரி மாவட்டம் கடியப்பட்டணம் அருகே நகைக்காக நான்கு வயது சிறுவனை கொலை செய்து பீரோவில் அடைத்த பெண்ணின் வீட்டை ஊர் பொதுமக்கள் சூறையாடினர். கன்னியாகுமரி மாவட்டம் கடியப்பட்டணம் மீனவ கிராமத்தை சேர்ந்தவர் ஜாண் ரிச்சார்ட் தற்போது இவர் வெளி நாட்டில் மீன்பிடி தொழிலில் ஈடுபட்டு வருகிறார்.
தற்போது அவரது மனைவி சகாய சில்ஜா மகன் ஜோகன் ரிஷி மற்றும் மகள் கடியப்பட்டணம் பகுதியில் உள்ள வீட்டில் தனியாக வசித்து வருகின்றனர். இந்நிலையில் சிறுவன் ஜோகன் ரிஷி நேற்று மதியம் வீட்டிற்கு வெளியே விளையாடி கொண்டிருந்த போது திடீரென மாயமானார், உடனடியாக அக்கம் பக்கத்தில் தேடியும் சிறுவன் கிடைக்காத நிலையில் சிறுவனின் தாய் மணவாளக்குறிச்சி காவல் நிலையத்தில் புகாரளித்தார்.
புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்த நிலையில், சிறுவன் மாயமான நேரம் கழுத்து மற்றும் கையில் தங்க நகைகள் அணிந்திருந்ததால் நகைக்காக கடத்தியிருக்கலாம் என சந்தேகமடைந்தனர்.
மேலும் பக்கத்து வீட்டை சேர்ந்த பாத்திமா என்ற பெண் மீது சந்தேகமடைந்த போலீசார் அவரை விசாரணைக்கு காவல் நிலையம் அழைத்து சென்றனர். இதற்கிடையில் சிறுவனை கடத்தியது பாத்திமா தான் என்ற தகவல் பரவிய நிலையில் அப்பகுதி பொதுமக்கள் பாத்திமா வீட்டை அடித்து நொறுக்கி சூரையாடினர்.
அப்போது வீட்டில் இருந்த பீரோவும் உடைந்த நிலையில் அதில் அந்த சிறுவன் வாய் துணியால் கட்டப்பட்ட நிலையில் காணப்பட்டார். இதைக்கண்ட பொதுமக்கள் சிறுவனை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்ற போது அவர் உயிரிழந்ததாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இந்நிலையில் மீண்டும் பாத்திமாவின் வீட்டை பொதுமக்கள் அடித்து நொறுக்கியதோடு அவரை உடனடியாக கைது செய்ய கோரி மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனால் அப்பகுதியில் பதற்றம் நிலவிய நிலையில் சம்பவ இடத்தில் போலீசார் குவிக்கப்பட்டனர். மேலும் பேச்சுவார்த்தையில் ஈடுபட்ட குற்றவாளி மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்ததை தொடர்ந்து போராட்டம் கைவிடப்பட்டது.
Tags
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu