சூறாவளி காற்றினால் மீன் பிடிக்க செல்ல முடியாமல் தவிக்கும் மீனவர்கள்

கன்னியாகுமரி கடற்கரையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள மீனவர்களின் படகுகள்.
கன்னியாகுமரி மாவட்டம் நீண்ட நெடிய கடற்கரை பகுதி கொண்ட மாவட்டமாகும். கன்னியாகுமரி ஆரோக்கியபுரம் முதல் நீரோடி வரை 72கிலோமீட்டர் தூரம் உள்ள கடலோரப் பகுதியில் மொத்தம் 48 கடற்கரை கிராமங்கள் உள்ளன. இந்த கிராமங்களில் கடந்த 2 நாட்களாகஇடைவிடாமல் தொடர்ந்து மழை பெய்தது. இன்று காலை மழை ஓய்ந்த போதிலும் காற்றின் வேகம் அதிகமாக உள்ளது. சூறாவளி காற்று காரணமாக,கடல் பயங்கர கொந்தளிப்பாகவும், சீற்றமாகவும் காணப்படுகிறது. கடல் சீற்றத்தினால் ராட்சத அலைகள் ஆக்ரோஷமாக எழும்பி வீசுகின்றன.
இதைத்தொடர்ந்து கன்னியாகுமரி, சின்ன முட்டம், ஆரோக்கியபுரம், கோவளம், வாவத்துறை, புதுகிராமம், சிலுவைநகர், கீழமணக்குடி,மணக்குடி, பள்ளம், ராஜாக்கமங்கலம் துறை என குமரி மாவட்ட கடற்கரை கிராமங்களை சேர்ந்த 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மீனவர்கள் இன்று கடலுக்கு மீன் பிடிக்க செல்லவில்லை
இதனால் ஆயிரக்கணக்கான வள்ளங்கள், கட்டுமரங்கள், நாட்டுப் படகுகள் கடற்கரையில் பாதுகாப்பான மேட்டுப் பகுதியில் வரிசையாகநிறுத்தி வைக்கப்பட்டு உள்ளன. இதே போல கன்னியாகுமரி அருகே உள்ள சின்ன முட்டம் மீன்பிடி துறைமுகத்தை தங்குதளமாக கொண்டுமீன்பிடித் தொழிலில் ஈடுபட்டு வரும் 350-க்கும் மேற்பட்ட விசைப்படகுகளும் இன்று காலை கடலுக்கு மீன் பிடிக்க செல்லவில்லை.அகஸ்தீஸ்வரம், லீபுரம், கொட்டாரம், சாமிதோப்பு, தென்தாமரைகுளம், அஞ்சுகிராமம் உள்பட பல பகுதிகளில் சூறாவளி காற்று வீசி வருகிறது.கனமழையின் காரணமாக பெரும்பாலான குளங்கள் நிரம்பி வழிகின்றன. கன்னியாகுமரி-நாகர்கோவில் இடையேயான தேசியநெடுஞ்சாலையில் கொட்டாரம் அருகே ரோட்டின் இருபுறமும் குளங்கள் உள்ளன. இதில் ரோட்டின் வட புறம் உள்ள அச்சன்குளமும் அதையொட்டி ஓடும் நாஞ்சில் நாடு புத்தனாறும் நிரம்பி வழிகின்றன. இந்த தண்ணீர் அச்சன்குளம் ஊருக்குள் புகுந்தது. இதனால் அந்தப் பகுதி தீவு போல் காட்சி அளிக்கிறது. அங்குள்ள கிறிஸ்தவ ஆலயம், நூல் நிலையம் மற்றும் வீடுகளை வெள்ளம் சூழ்ந்து நின்றது. அதுமட்டுமின்றிஅச்சன்குளம் நிரம்பி கன்னியாகுமரி நாகர்கோவில் தேசிய நெடுஞ்சாலையில் வெள்ளம் மறுகால் பாய்ந்து ஓடுகிறது.
அதன் அருகில் உள்ள பில்லாகுளத்தில் தண்ணீர் செல்வதால், சாலை வெளியே தெரியாத அளவுக்கு ஆறு போல் காட்சியளித்தது. இதனால் சாலையில்அரிப்பு ஏற்பட்டது. கொட்டாரம்-அச்சங்குளம் பகுதியில் பழமையான ராட்சத புளியமரம் வேரோடு சாய்ந்தது. அந்தப் பகுதியில் 3 மின்கம்பங்களும் சாய்ந்து விழுந்தன. இதனால் அந்த பகுதியில் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது.
மேலும் கன்னியாகுமரி-நாகர்கோவில் இடையே போக்குவரத்தும் துண்டிக்கப்பட்டது. கன்னியாகுமரி போலீசார், மின்சார வாரிய ஊழியர்கள் மற்றும் கொட்டாரம் பேரூராட்சி நிர்வாகத்தினர் அங்குவிரைந்து சென்று பொதுமக்கள் உதவியுடன் சாலையில் கிடந்த மரம் மற்றும் மின்கம்பங்களை அகற்றும் பணியில் தீவிரமாக ஈடுபட்டனர். இதைத்தொடர்ந்து 2 மணி நேரத்துக்கு பிறகு அந்த பகுதியில் போக்குவரத்து சீரானது. தொடர்மழையின் காரணமாக கன்னியாகுமரிக்குபகுதியில் உள்ள சுற்றுலாத் தலங்கள் வெறிச்சோடி கிடக்கின்றன. இதற்கிடையில் தொடர் மழையின் காரணமாக விவேகானந்தர் மண்டபத்துக்கு இன்று2-வது நாளாக படகு போக்குவரத்து ரத்து செய்யப்பட்டுள்ளது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu