குமரியில் கஞ்சா விற்பனை - கல்லூரி மாணவர் உட்பட இரண்டு பேர் கைது
குமரியில் ஒன்றரை கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது; இது தொடர்பாக, கல்லூரி மாணவர் உட்பட இரண்டு பேர் கைது செய்யப்பட்டனர்.
HIGHLIGHTS
கன்னியாகுமரி மாவட்டத்தில் கஞ்சா விற்பனையை ஒடுக்க தற்போது தனிப்படை அமைக்கப்பட்டு மாவட்டம் முழுவதும் கண்காணிப்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றது. இதனிடையே இறச்சகுளம் பகுதியில் கஞ்சா விற்பனை நடைபெறுவதாக தகவல் வந்ததை தொடர்ந்து போலீசார் அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது சந்தேகப்படும்படியாக நின்றுகொண்டு இருந்த இரு இளைஞர்களை பிடித்த போலீஸார், அவர்களிடம் விசாரணை மேற்கொண்டனர்.
அப்போது, அவர்கள் ஒன்றரை கிலோ கஞ்சாவை விற்பனைக்காக மறைத்து வைத்திருந்தது தெரிய வந்தது. இதனை தொடர்ந்து இறச்சகுளம் பகுதியைச் சேர்ந்த 19 வயதான கல்லூரி மாணவர் அஜித் மற்றும் நாவல் காடு பகுதியைச் சேர்ந்த 23 வயதான இர்வின் ஜெயக்குமார் ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்தனர். தொடர்ந்து அவர்களுக்கு கஞ்சா எப்படி கிடைத்தது கஞ்சா விற்பனையில் இவர்களோடு தொடர்புடையவர்கள் யார் யார் என போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் அவர்களிடம் இருந்த இருசக்கர வாகனத்தையும் பறிமுதல் செய்தனர்.