நம்மை காக்கும் 48 திட்டத்தில் சிகிச்சை பெறும் லட்சமாவது நபரை சந்தித்த அமைச்சர்

நம்மை காக்கும் 48 திட்டத்தில் சிகிச்சை பெறும் லட்சமாவது நபரை சந்தித்த அமைச்சர்
X

 இன்னுயிர் காப்போம் நம்மை காக்கும் 48 திட்டத்தின் கீழ் சிகிச்சை பெற்று வரும் 1 இலட்சமாவது நபரை நேரில் சந்தித்து நலம் விசாரித்த சுகாதாரத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் 

தனியார் மருத்துவமனைகள் 445 மற்றும் அரசு மருத்துவமனைகள் 228 என மொத்தம் 673 மருத்துவமனைகள் இத்திட்டத்தில் உள்ளது

காஞ்சிபுரம் மாவட்டம், தண்டலத்தில் சவீதா மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில், இன்னுயிர் காப்போம் நம்மை காக்கும் 48 திட்டத்தின் கீழ் சிகிச்சை பெற்று வரும் 1 இலட்சமாவது நபரை நேரில் சந்தித்து அவருக்கு அளிக்கப்படும் சிகிச்சை குறித்து தமிழக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கேட்டறிந்து நலம் விசாரித்தார்.

பின்னர் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது: இன்னுயிர் காப்போம், நம்மைக் காக்கும் 48 திட்டம் விபத்து நடந்து 48 மணி நேரத்தில் அவசர சிகிச்சைக்கான இலவச மருத்துவ உதவித்திட்டமாகும். இது 18.12.2021 அன்று மேல்மருவத்தூர் மருத்துவக்கல்லூரியில் தமிழ்நாடு முதலமைச்சரால் துவக்கி வைக்கப்பட்டது.

விபத்து நடந்த முதல் 48 மணி நேர நெருக்கடியான காலகட்டத்தில் முழுமையான சிகிச்சை வழங்க தேவையான நிதியினை வழங்குவதை இத்திட்டம் உறுதி செய்வதாகும்.இத்திட்டத்தில் வழங்கப்படும் சிகிச்சையானது இறப்பு மற்றும் நோயுற்ற தன்மையை பெருமளவு குறைப்பதையும், விபத்து ஏற்பட்டவுடன் உடனடியாக மருத்துவ சிகிச்சை வழங்குதல் மற்றும் நோயாளியின் தேவையற்ற இடமாற்றத்தை தவிர்ப்பதலையும் நோக்கமாக கொண்டுள்ளது.

விபத்தில் பாதிக்கப்படும் நபருக்கு அதிகபட்சமாக ரூபாய் 1 இலட்சம் வரை சிகிச்சைக்காக வழங்கப்படுகிறது. விபத்தில் பாதிக்கப்பட்ட வரை உடனடியாக மருத்துவமனையில் சேர்க்கும் நபருக்கு ரூபாய் 5000/- ஊக்கத்தொகை அரசால் வழங்கப்படுகிறது.விபத்தில் பாதிக்கப்படும் கிராமப்புறத்தினர், நகர்ப்புறத்தினர், வெளிமாநிலத்தவர்கள் மற்றும் வெளிநாட்டினர் யாராக இருந்தாலும் இத்திட்டத்தின் மூலம் பயன்பெறலாம்.

சாலை பாதுகாப்பு என்பது மக்கள் இயக்கமாக மாற பள்ளி, கல்லூரி மாணவர்கள், மக்கள் பிரதிநிதிகள், உள்ளாட்சி மற்றும் தன்னார்வ அமைப்புகள், விபத்தில் முதலுதவி செய்யும் பொதுமக்கள் அனைவருக்கும் பயிற்சி மற்றும் விழிப்புணர்வு உருவாக்கும் வகையில் இந்ததிட்டம் உருவாக்கப்பட்டுள்ளது.

அதிக விபத்து நடைபெறும் 500 நெடுஞ்சாலை இடங்களை கண்டறிந்து, அதற்கு அருகாமையில் தகுதி வாய்ந்த தனியார் மருத்துவமனைகள் 445 மற்றும் அரசு மருத்துவமனைகள் 228 ஆக மொத்தம் 673 மருத்துவமனைகள் கண்டறியப்பட்டு, உடனடியாக விபத்தில் பாதிக்கப்பட்ட வரை சிகிச்சைக்காக கொண்டு சேர்க்கப்படுகிறது.இதுவரை இந்த திட்டத்தின்கீழ் 18.12.2021 முதல் 02.08.2022 வரை ரூ.90.19 கோடி செலவில் 1,00,061 நபர்கள் சிகிச்சை பெற்று உள்ளனர் என்று மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் தெரிவித்தார்.

இந்நிகழ்வில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அரசு முதன்மை செயலாளர் முனைவர்.ப.செந்தில்குமார், தமிழ்நாடு சுகாதார அமைப்பு திட்ட இயக்குநர் மரு.உமா, காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர்ஆர்த்தி, சவீதா மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வேந்தர் டாக்டர்.என்.எம்.வீரைய்யன், துணைவேந்தர் மரு.சிவாஜிசடாரம், இயக்குநர் மரு.தீபக், முதல்வர் மரு.ஜெ.தாமோதரன் மற்றும் மருத்துவ அலுவலர்கள் கலந்துக்கொண்டனர்.


Tags

Next Story