ஏ.டி.எம் மைய குப்பைத் தொட்டியில் கிடந்த 43 பவுன் நகை: காவல்துறையில் ஒப்படைத்த காவலாளி..!

ஏ.டி.எம் மைய குப்பைத் தொட்டியில் கிடந்த 43 பவுன் நகை: காவல்துறையில் ஒப்படைத்த காவலாளி..!
X

குன்றத்தூரில் ஏ.டி.எம் மைய குப்பைத்தொட்டியில் கிடந்த நகைகளை காவல்துறை ஆய்வாளர் சந்துருவிடம் ஒப்படைக்கும் நேர்மையான காவலாளி கோதண்டம்.

குன்றத்தூரில், ஏ.டி.எம் மையத்தின் குப்பை தொட்டியில் பெண் விட்டுச் சென்ற 43 பவுன் நகைகளை மீட்ட காவலாளி, காவல்துறையிடம் ஒப்படைத்த சம்பவம் பாராட்டை பெற்றுள்ளது.

குன்றத்தூர் முருகன் கோவில் செல்லும் சாலையில் தனியாருக்கு சொந்தமான வங்கி மற்றும் ஏ.டி.எம் மையம் செயல்பட்டு வருகிறது.இந்த வங்கியில் காவலாளியாக வேலை செய்து வருபவர் கோதண்டம். இவர், நேற்று காலை ஏ.டி.எம் மையத்திற்குள் சென்று பார்த்த போது குப்பை தொட்டியில் கைப்பை ஒன்று இருந்துள்ளது.

அதனை பிரித்து பார்த்தபோது அதில் நகைகள் இருப்பதை கண்டு முதியவர் கோதண்டம் அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து குன்றத்தூர் காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த குன்றத்தூர் ஆய்வாளர் சந்துரு தலைமையில் வந்த போலீசார் நகை பையை மீட்டு விசாரணை மேற்கொண்டனர்.மேலும் ஏ.டி.எம் மையத்தில் இருந்த கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்தபோது 35 வயதுடைய பெண் ஒருவர் ஏ.டி.எம் மையத்திற்குள் சென்று கதவை திறந்து குப்பை தொட்டியில் நகை பையை போட்டு விட்டு செல்வது போன்ற காட்சி பதிவாகி இருந்தது.

அந்த பெண் யார் என காவல்துறையினர் விசாரித்து வந்த நிலையில் குன்றத்தூரில் 35 வயதுடைய தனது மகளை காணவில்லை என்று அவரது பெற்றோர் வாய்மொழியாக போலீசாருக்கு தெரிவித்த நிலையில் பின்னர் அவர் வீட்டிற்கு வந்து விட்டதாக தெரிவித்தனர். இதனால் சந்தேகம் அடைந்த காவல்துறையினர் சி.சி.டி.வி காட்சிகளை அந்த பெண்ணின் பெற்றோரிடம் காண்பித்தபோது அந்த காட்சியில் இருப்பது தனது மகள் என தெரிவித்தனர்.

அப்போதுதான் அவர் 43 பவுன் நகைகளை குப்பை தொட்டியில் போட்டுவிட்டு சென்றது குறித்து காவல்துறையினர் அவரது பெற்றோருக்கு தெரிவித்தனர்.இதையடுத்து குன்றத்தூர் போலீசார் அந்த பெண்ணின் பெற்றோர் மற்றும் வங்கி ஊழியர்களை அழைத்து நகைகளை அவர்களிடம் ஒப்படைக்கும் பணியில் ஈடுபட்டனர். அந்த பெண் சற்று மன அழுத்தத்தில் இருந்து வந்ததாகவும் தூக்கத்தில் எழுந்து நடந்து வரும்போது வீட்டில் இருந்த நகையை பையில் போட்டு எடுத்து வந்து குப்பை தொட்டியில் போட்டுவிட்டு சென்றதும் தெரியவந்தது. உரிய நேரத்தில் நகைகளை கண்டெடுத்து கொடுத்த வங்கி காவலாளி கோதண்டத்தை போலீசார் வெகுவாக பாராட்டினர்.

Tags

Next Story