தெருவிளக்கு அமைப்பதில் ஊழல்: லஞ்ச ஒழிப்பு துறையில் மாமன்ற உறுப்பினர் புகார்

தெருவிளக்கு அமைப்பதில் ஊழல்: லஞ்ச ஒழிப்பு துறையில்  மாமன்ற உறுப்பினர் புகார்

காஞ்சிபுரம் மாநகராட்சியில் தெருவிளக்குகள் தரக்குறைவாக அமைத்துள்ளதாகவும் , அதில் ஊழல் நடைபெற்றுள்ளதாக கூறி புகார் மனு அளித்த மாமன்ற உறுப்பினர் சிந்தன்.

தெருவிளக்கு அமைக்க காப்பர் ஒயர் பயன்படுத்த வேண்டிய நிலையில் அலுமினிய ஓயர் பயன்படுத்தப்படுவதாக புகார் கூறப்பட்டுள்ளது

காஞ்சிபுரம் மாநகராட்சியில் சாலை தெருவிளக்குகள் தரக்குறைவாக அமைத்துள்ளதாகவும், இதில் 5 கோடி ரூபாய் ஊழல் நடந்துள்ளதாக மாமன்ற அதிமுக உறுப்பினர் சிந்தன், காஞ்சிபுரம் மாவட்ட ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு அலுவலகத்தில் புகார் அளித்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

காஞ்சிபுரம் மாநகராட்சி 51 வார்டுகளை உள்ளடக்கி செயல்பட்டு வருகிறது. இந்த மாநகராட்சியில் திமுகவினர் அதிக பெரும்பான்மையுடன் மேயராக மகாலட்சுமி செயல்பட்டு வருகிறார்.

ஆரம்ப காலம் முதலில் அதிமுகவினர் பல்வேறு பணிகள் செய்து வருவதில் முறைகேடுகளும், தரம் குறைவாக இருப்பதாக தொடர்ந்து குற்றம் சாட்டி வந்தனர்.

இந்நிலையில் காஞ்சிபுரம் மாநகராட்சி முழுவதும் 12 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தெரு மின்விளக்குகள் மின்சாரத்தில் இயங்கி வந்த நிலையில் , மின் கட்டணம் குறைப்பு மற்றும் மின்சார சிக்கனம் வலியுறுத்தி அனைத்து மின்விளக்குகளையும் எல்இடி மின் விளக்குகளாக மாற்ற டெண்டர் கோரப்பட்டு, சென்னையை சேர்ந்த இரண்டு நிறுவனங்களுக்கு சுமார் 12.5 கோடி மதிப்பில் ஒப்பந்தங்கள் வழங்கப்பட்டது.

இந்நிலையில் இந்த பணிகளில் அரசு விதிகளை பின்பற்றவில்லை என்றும், தரமற்ற பொருட்களை பயன்படுத்துவதால் பொதுமக்களுக்கு பயனில்லை எனக் கூறி அதில் ஊழல் நடந்துள்ளதாக அதிமுக மாமன்ற உறுப்பினர் சிந்தன், காஞ்சிபுரம் மாவட்ட ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு அலுவலகத்தில் புகார் மனு ஒன்றை அளித்துள்ளார்.

அம்மனுவில் , கடந்த 2022 ஆம் ஆண்டு சென்னை நகராட்சி நிர்வாக இயக்குனர் ஆணைப்படி, காஞ்சிபுரம் மாநகராட்சியில் உள்ள 4 மண்டலங்களில் தெருவிளக்குகள் அமைக்க ரூ 12.5 கோடி ஒப்பந்தம் கோரப்பட்டதாகவும், தெருவிளக்குகள் அமைக்க *காப்பர் கேபிள்களை* பயன்படுத்த வேண்டும் என்ற விதிமுறைகளை மீறி அலுமினிய ஒயர்களை கொண்டு இணைப்புகள் மேற்கொள்ளப் படுவதாகும் கூறப்படுகிறது,

மிக மலிவு விலையில் *எல்இடி* தெரு விளக்குகள் பயன்படுத்துவதால் ஓரிரு நாட்களிலே பழுதாகி பொதுமக்களுக்கு பயனற்றதாக விளங்கி வருகிறது. இதுகுறித்து பலமுறை புகார் தெரிவித்தும் இப்பணிகள் 50 சதவீதத்திற்கு மேல் முடிந்து விட்டதாகவும் , இதற்கு லஞ்சமாக *ரூபாய் ஐந்து கோடிக்கு* மேல் மேயர் மற்றும் ஆணையர், பொறியாளர், மேயரின் கணவர் உள்ளிட்டோருக்கு அளிக்கப்பட்டதாக தெரிய வருகிறது.

இதனால் இதனை ஆய்வு செய்து ஊழல் மற்றும் லஞ்சம் தொடர்பான செய்கையில் ஈடுபட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாவட்ட ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு அலுவலகத்தில் புகார் மனு அளிதத்துள்ளதாக மாமன்ற உறுப்பினர் சிந்தன் தெரிவித்துள்ளார் .

கடந்த சில தினங்களுக்கு முன்பு மேயர் மீது நம்பிக்கை இல்லை என கூறி முப்பதுக்கு மேற்பட்ட திமுக அதிமுக பாஜக மன்ற உறுப்பினர்கள் கோரிக்கை மனு அளித்து நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டுவர உத்தரவிட வேண்டுமென மனு அளித்தது குறிப்பிடத்தக்கது.

Tags

Next Story