பைக் சாகச யூடியுபர் டிடிஎஃப் வாசன் ஜாமீன் மனு இரண்டாவது முறையாக தள்ளுபடி
பிரபல யூடியுபர் டிடிஎப் வாசன் விபத்தில் சிக்கி காயம் அடைந்த வழக்கில் இரண்டாவதுமுறையாக அவரது ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்டது.
HIGHLIGHTS

பிரபல யூடியுபர் டிடிஎப் வாசன் (பைல்படம்)
பிரபல யூடியூபர் டிடிஎஃப் வாசன் கடந்த 17ஆம் தேதி சென்னை - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் காஞ்சிபுரம் அடுத்த தாமல் பகுதியில் உயர்ரக பைக்கில் சென்று சாகசம் செய்ய முயன்று விபத்து ஏற்பட்டு காயமடைந்தார்.
கை முறிவு காயம் அடைந்து தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று விட்டு சென்ற நிலையில் பாலுசெட்டிசத்திரம் போலீசார் 5 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்தனர்.
காஞ்சிபுரம் நீதித்துறை நடுவர் நீதிமன்றம் எண் 1-ல் டிடிஎஃப் வாசன் ஆஜர்படுத்தப்பட்டு வரும் அக்டோபர் 3- ந்தேதி வரை நீதிமன்ற காவல் அளித்து புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில் அதே நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்ட அன்றே ஜாமீன் கேட்ட நிலையில் வழக்கு விசாரணை கடந்த வியாழக்கிழமை வந்த பொழுது ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்டது.
இதனை தொடர்ந்து புழல் சிறையில் அடைக்கப்பட்டிருந்த வாசன் கை முறிவு சிகிச்சைக்காக ஸ்டான்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சிறையில் அடைக்கப்பட்டு இரண்டு நாட்கள் ஆன நிலையில் கடந்த வெள்ளிக்கிழமை காஞ்சிபுரம் மாவட்ட மற்றும் அமர்வு நீதிமன்றம் எண் 2-ல் நீதிபதி செம்மல் முன்னிலையில் ஜாமீன் கேட்டு டிடிஎஃப் வாசனின் வழக்கறிஞர்கள் ஜாமீன் மனு தாக்கல் செய்தனர்.
இந்த வழக்கு இன்று காஞ்சிபுரம் நீதிமன்றத்தில் நீதிபதி செம்மல் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. வாசன் தரப்பில் வழக்கு விசாரணைக்கு ஆஜரான வழக்கறிஞர், வெங்கட்ராமன் ஆகியோர் உடல்நிலை சரியில்லாமல் டிடிஎஃப் வாசன் இருப்பதாகவும் வாசனுக்கு ஜாமீன் வழங்க வேண்டும் எனவும் வாதாடினர்.
அரசு தரப்பில் ஆஜரான கார்த்திகேயன், டிடிஎஃப் வாசனுக்கு ஜாமீன் வழங்கும் பட்சத்தில் இது தவறான முன் உதாரணமாக அமையும் என வாதாடினார். இதனை தொடர்ந்து நீதிபதி செம்மல் இன்னும் காஞ்சிபுரம் வட்டார போக்குவரத்து அலுவலர் புலனாய்வு விசாரணை முடிவடையாத நிலையில் ஜாமீன் வழங்க முடியாது என கூறி இரண்டாவது முறையாக ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்தார்.