காஞ்சிபுரம் மாவட்டத்தில் தொடர் மழையால் நிரம்பி வழியும் தடுப்பணைகள்
காஞ்சிபுரம் மாவட்டத்தில் அனுமந்தண்டலம் மற்றும் மாகரல் தடுப்பணைகளில் தொடர் மழை காரணமாக நீர் நிரம்பி வழிந்து ஓடுகிறது.
HIGHLIGHTS

மாகரல் தடுப்பணையில் நீர் நிரம்பி வழிந்து ஓடும் காட்சி
காஞ்சிபுரம், திருவண்ணாமலை மாவட்டத்தில் பெய்து வரும் தொடர் மழை காரணமாக செய்யாற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள இரண்டு தடுப்பணைகளும் நிரம்பி நீர் வழிந்து செல்வதால் விவசாயிகள் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
தமிழ்நாட்டில் வானிலை மாற்றம் மற்றும் காற்று திசை மாறுபாடு காரணமாக கடந்த ஒரு வார காலமாக காஞ்சிபுரம், திருவள்ளூர், திருவண்ணாமலை, ராணிப்பேட்டை உள்ளிட்ட பத்துக்கும் மேற்பட்ட மாவட்டங்களில் அவ்வப்போது லேசானது முதல் கன மழை வரை பெய்து வருகிறது.
அனுமந்தண்டலம் தடுப்பணையில் நீர் நிரம்பி வழிந்து ஓடும் காட்சி
இந்நிலையில், காஞ்சிபுரம் மாவட்டத்தில் காஞ்சிபுரம், உத்திரமேரூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மாலை மற்றும் இரவு நேரங்களில் கன மழை பெய்து வருகிறது.
அவ்வகையில் கடந்த சில தினங்களில் மட்டும் 207 மில்லி மீட்டர் மழை பொழிந்துள்ளது.இதில் காஞ்சிபுரம் , உத்திரமேரூர் பகுதியில் மட்டும் 50 சதவீதத்திற்கும் மேல் மழை பொழிந்துள்ளது.
இது மட்டும் இல்லாமல் காஞ்சிபுரத்தின் பக்கத்து மாவட்ட திருவண்ணாமலையின் பகுதிகளான செய்யாறு, வந்தவாசியில் மழை பொழிவதால் செய்யாற்றில் நீர்வரத்து அதிகரித்துள்ளது.
குறிப்பாக செய்யாற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள அனுமந்தண்டலம் மற்றும் மாகரல் தடுப்பணையில் தற்போது நீர் நிரம்பி வழிந்தோடி வருகிறது.
தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து வருவதால் செய்யாற்று கரையோர விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
இது ஒரு புறம் இருக்க தோட்டக்கலை துறை விவசாயிகள் தொடர் மழையால் பெரிதும் பாதிக்கப்பட்டு காய்கள் மழையில் அழுகி வரும் நிலை ஏற்பட்டுள்ளதாக வருத்தத்துடன் தெரிவிக்கின்றனர்.
இது மட்டுமில்லாமல் கிராமங்களில் உள்ள வயல்களிலும் நீர் தேங்கி இருப்பதால் உடனடியாக விவசாய பணியை துவக்க இயலாத நிலையும் ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் கவலை தெரிவித்துள்ளனர்.